காதல் செய்

குழந்தாய்...
குழந்தாய்...
உன்னால்
முடியும் போதே
காதல் செய்...

கண்களொரு ஜோடியை;
களங்கமில் ஆத்மாவை;
உன்னால்
முடியும் போதே
காதல் செய்...

கர்வத்தோடும்,
களிப்போடும்,
கவலையின்றிக்
காதல் செய்...

காதல் தோல்வியுறின்
காயங்கள்
சகஜம் தான்,
இருந்தாலும்,
காயங்களில்
இருந்து தான்
பேருவகை
மீள்துயிர்க்கும்,
பயங்கள்
விட்டொழி!

காதலில்...
ஒன்று சொர்க்கம்;
அன்றேல் நரகம்;
அவ்வளவே! அவ்
அன்புநிலையில்
இல்லை ஓர்
திரிசங்கு சுவர்க்கம்!

வாழ்க்கை என்பது
வரையறையுள்ளது;
குறுகிய நாள் போன்றது;
பேரன்பால் மட்டுமே
அர்த்தமுளதாகுமது;

ஆதலால்...
குழந்தாய்!
உன்னால்
முடியும் போதே
காதல் செய்..
~ தமிழ்க்கிழவி (2018)

எழுதியவர் : தமிழ்க்கிழவி (20-Oct-18, 5:19 am)
சேர்த்தது : தமிழ்க்கிழவி
Tanglish : kaadhal sei
பார்வை : 291

மேலே