கணிஞன் குறள் திறன்

இணையத்தில் உலா வருவோர் குறள் நல்கும் இலக்கிய இன்பத்தைத் துய்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்டது இத்தளம்.

தோன்றிய காலம் தொட்டு எல்லோராலும் போற்றிக் கொண்டாடப்பற்ற ஒப்புயர்வற்ற தமிழ் நூல் திருக்குறள். புலவர் பெருமக்களும் அறிஞர்களும் தெய்வப் புலவர் என்று குறளாசிரியர் வள்ளுவரை வாழ்த்தி வணங்கினர். உலக இலக்கியங்களிலே குறள் போன்று அறிவு வளம் செறிந்த கருத்துக்களின் தொகுப்பு நூல் காண்பது அரிது என்று இக்கால சிந்தனையாளர்களாலும் பாராட்டுப்படும் பெருநூல் திருக்குறளாகும். குறள் பரந்துபட்ட வாழ்வியல் கருத்துக்களை தன்னுள்ளே அடக்கி நட்புணர்வோடு அவற்றை நமக்கு உணர்த்துகிறது.

இத்தளத்தின் நோக்கமும் இலக்கும்
அனைவரும் படித்து இன்புறும் வண்ணம், பெருமைக்குரிய பண்டைய தமிழ் இலக்கியங்களுக்கு உரைகள் பல வெளிவருகின்றன. தொடர்ந்து திறனாய்வு நூல்களும் நிறைய வந்து கொண்டிருக்கின்றன. எல்லாப் பொருளும் இதன்பால் உளதால் திருக்குறளுக்கு உரைநூல்களும் திறனாய்வு நூல்களும் இன்னும் பலவாகும். உரைகள் பல தோன்றியதால் குறள் கூறும் கருத்து என்ன என்று புரிந்து கொள்வதில் சில சமயங்களில் மயக்கமும் குழப்பமும் உண்டாகின்றன.

திருக்குறள் சொல்லும் உண்மையான கருத்துக்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் நாளும் பெருகி வருகிறது.
பரபரப்பான வாழ்க்கை முறை, மாறிவரும் கல்விமுறையின் நோக்கஙகள் இவை ஒருபுறம் பழம் இலக்கியங்களைப் படிக்கத் தடைகளாக இருக்க, மறுபுறம் ஊடகங்களின் வேகமான வளர்ச்சி, இணையதள தொழில்நுட்ப முன்னேற்றம் இவற்றால் இலக்கியங்களை எல்லாரும் எந்த நேரத்திலும் எளிதாக அறிந்து கொள்ள வாய்ப்புக்கள் மிகையாக உள்ளன. இன்றைய இணைய உலகில் குறளுக்குப் பலர் தளம் அமைத்துப் பெரும் பணி ஆற்றுகின்றனர். குறளோடு பதவுரை, பொழிப்புரை, விரிவுரை வழங்கும் இணைய தளங்கள் மிகையாகக் காணப்படுகின்றன. கல்வி நிறுவனங்களாலும் குறள் ஆர்வலர்களாலும் அமைக்கப்பட்ட பயனுள்ள தளங்கள் நிறைய உண்டு. வலைப்பூக்களும் மற்ற இலக்கியத் தளங்களும் திருக்குறளை ஆய்கின்றன.

நல்ல பல குறள் ஆய்வுக்கட்டுரைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் பரவிக் கிடக்கின்றன.
அச்சிலிருப்பவை/ அச்சிலிருந்து மறைந்த பழைய பதிப்புகள் இவற்றில் விழுமிய ஆய்வுரைகள் அடங்கியுள்ளன. இவற்றையெல்லாம் தொகுத்தல் நல்ல பயன் தரும்.
திருக்குறளுக்கு உள்ள பழைய உரைகளைத் தொகுத்து, உரைவளம், உரைக்கொத்து, உரை வேற்றுமை, உரைக்களஞ்சியம் ஆகிய பயனுள்ள நூல்கள் வெளிவந்துள்ளன. உரையாசிரியர்கள் செய்த ஆய்வோடு இப்பதிப்பாசிரியர்களும் தங்கள் மேலான கருத்துரைகளுடன் குறளைத் திறன் செய்திருக்கிறார்கள்.
ஒரு நூலுக்கு திறனாய்வு நூல்கள் மேலும் அணி கூட்டும். மூலநூலின் குறைகளைச் சுட்டிக்காட்டினாலும் திறனாய்வுகள் மூலத்திற்குக் கூடுதல் பெருமை சேர்க்கும் பெற்றிமை கொண்டன. நல்ல திறனாய்வு நூல்கள் மூலநூலை மேலும் ஊன்றிப்படிக்க உற்சாகமூட்டக்கூடியனவுமாகும்.

ஒரு குறளுக்கமைந்த பல ஆய்வு உரைகளில் காணும் செய்திகளைத் தொகுத்து அவற்றுள் குறட்கருத்துக்குப் பொருத்தமானது எது என்று தெளிவிக்கும் முயற்சியாக அமைந்ததே இத்தளம். இத்தளத்தின் கருத்துரையும் சேர்த்து வழங்கப்படுகிறது.
இணையதள நுகர்வோரை இலக்காக வைத்து, வள்ளுவ உள்ளத்தை அவர்களிடம் கொண்டு சேர்க்கும் நோக்கத்துடன் குறள் திறனாய்வு செய்யப்படுகிறது. அவர்கள் குறளைச் சுவைத்து இன்புறவேண்டும் என்பதுடன் குறளின் பொருள் உணர்ந்து நூற்பயன் துய்த்து மேலும் பலரைப் படிக்கத்தூண்டவேண்டும் என்பதும் ஒரு நோக்கமாகும். திருக்குறள் சொல்லுகிற செய்திகளின் மேன்மையைப் பரவலாக்கும் குறிக்கோளுடனும் இந்தக் தளம் செயல்படும்.

தள அமைப்பு
இது ஒருங்குறி (Unicode) பயன்படுத்தப்பட்ட தளமாகும்.

திறன் பக்கங்கள் ஒவ்வொன்றும் குறள், அதன் பொழிப்புரை (மு வ உரையைத் தழுவியது) இவற்றுடன் தொடங்குகிறது.
அதன்பின் மூன்று உரைகள் கொடுக்கப்பட்டுள்ளன; மற்ற உரையாசிரியர்களுக்கு முன்னோடியாகவும் வழிகாட்டியாகவும் விளங்கிய மணக்குடவர், ஆழ்ந்த ஆராய்ச்சித்திறன் கொண்ட பரிமேலழகர் ஆகியோர் உரைகள் அந்தந்த குறளுக்குத் தரப்பட்டுள்ளன. இன்றைய உரைகளில் வெவ்வேறு ஆசிரியர்கள் வரைந்தவை மூன்றாவதாக அமைகிறது.
பின்னர் பொருளை எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் 'பொருள்கோள் வரி அமைப்பு' என்பதாக குறட்செய்யுளின் சீர்கள் மாற்றித் தொடுக்கப்பட்டுத் தரப்பட்டுள்ளன.
அடுத்து குறள் இரண்டு தொடர்களாகப் பிரிக்கப்பட்டு விளக்க உரைகள் இடம்பெற்றுள்ளன. நிறையுரையாக தொகுப்பு கூறப்பட்டுள்ளது. கடைசியாக அதிகார இயைபு கூறப்பட்டு பொழிப்பு இடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குறளுக்குமான திறன் பக்கங்கள் பட்டியலிடப்பட்டுள்ளது. இப்பட்டியலிலிருந்து விரும்பும் குறளுக்கான உரையைத் தேர்வு செய்து படிக்கலாம்.
அதுபோலவே ஒவ்வொரு அதிகாரத்திற்கும் விளக்கக் கட்டுரை கொடுக்கப்படும். அதிகாரவிளக்கப் பட்டியலிலிருந்து தேவையான அதிகாரவிளக்கக் கட்டுரையைத் தெரிவு செய்து படிக்க முடியும்.

இத்தளத்தில் பால்வகை, இயல்வகை, அதிகாரவகை, குறள்எண்வகையாக குறளையும் அதற்கான உரைகளையும் தேட முடியும்.

திருவள்ளுவர், திருக்குறள், அறம், பொருள், காமம், உரையாசிரியர்கள், திருவள்ளுவமாலை, குறளில் குறைகள்?, பாடவேறுபாடுகள், நறுஞ்செய்திகள் என்னும் தலைப்புக்களில் கட்டுரைகளும் உள்ளன.

ஒவ்வொரு அதிகாரத்திலிருந்தும் குறைந்தது ஒரு குறளுக்கு இப்பொழுது திறனுரை தரப்பட்டுள்ளது. இது இன்னும் விரிந்து செல்லும்.






கணிஞன்

எழுதியவர் : (14-Dec-18, 2:41 am)
பார்வை : 55

மேலே