பேசும் சிற்பங்கள்

கவிதைக்கும் காவியத்திற்கும்
மொழிகள் உண்டு -கவிஞன் நான்
சிற்பிகள் செதுக்கிவைத்த
சிற்பங்கள் பலவற்றைப் பார்த்து
பல நேரம் சிந்திப்பதுண்டு

பல்லவ காலத்து சிற்பிகள்
செதுக்கிவைத்த ஐந்து ரதங்கள்.
பகீரதன் தவக்கோலம்,
ஹம்பியில் கண்ட நடன
மாதர்களின் சிலைகள்,
அங்கோர் மூலையில்
இந்தியவைத் தாக்கவந்த
அந்நியரால் சிதையுண்ட
நரசிம்மரின் அற்புத யோக கோலம்…...
இன்னும் எதனை எத்தனையோ…….
அத்தனையுமே பேசும் பொற்சித்திரங்கள்,
நான் அவற்றைப் பார்த்தபோது
என்னோடு தமிழில் பேசின அச் சித்திரங்கள்.

என் நண்பர்கள் அயல் நாட்டவர்,
அவர்கள் பார்க்கையில் அவரவர்
மொழிகளில் அவர்களோடு பேசியதாய்
அவர்கள் உணர்ந்து என்னிடம் சொல்ல
ஒன்று எனக்கு புரிந்தது
காலத்தை வென்ற சிற்பியின் கைவண்ணங்கள்
எத்தனையோ எத்தனையோ மொழிகளை
தன்னுள் அடக்கிவைத்தனவோ
இந்த பேசும் சித்திரங்கள்
பன்மொழியில் பேசும் சிற்பங்கள் …..

கவிஞன்நான் எழுதும் கவிதை காவியம்
இவற்றிற்கு ஒரு மொழிதான்
சிற்பியின் திறனால் ஆக்கப்படும்
சிற்பங்களோ பன்மொழி பேசும் அற்புதங்கள்
காலத்தைக் கடந்த அரிய பொக்கிஷங்கள்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன் -வாசு (29-May-19, 9:20 am)
Tanglish : pesum sirpangal
பார்வை : 123

மேலே