பத்தில் இருந்து ஒன்பது

#ஸ்ரீஹிதா #தெலுங்கானா #வாரங்கல்

கணவன்,மனைவியெனும் பெயர் நீக்கி, பெற்றோரெனும் பெயர் வைத்தாய்,
துன்பம் நிறைந்த நேரத்திலே, இன்பமென நீயுதித்தாய்,
ஈரைந்து மாத காலம் நீயுன் தாயறையில் தஞ்சமிருந்தாய்,
உலகத்தின் உண்மை அறியுமுன்பே,
உணர்ச்சியெனும் சொல்லின் அர்த்தமறியுமுன்பே,

குடியெனும் கடவுளும்,
கூடியது ஓர் அரக்கனிடம்.
நித்திரையில் நீயிருக்க,
வீதியுலா வந்தவன் யார்,
வீட்டின் மேற்க்கூரை வரை வந்தவன் எமன் என அறியாது
ஏனம்மா நித்திரை கொண்டாய்.

அப்பன் தூக்குகிறான்,
அம்மா தூக்குகிறாளென
அமைதியாய் இருந்து விட்டாயோ என் செல்லமே,

அன்பின் தொடுதலை கூட தாங்க முடியாத உன் சிறிய மேனி,
எப்படியம்மா அவனிடம் ......(இமையோரத்தில் இரு சொட்டு)
பத்து மாதம் உதிரத்திலிருந்தாய் தாயின் அரவணைப்பில்,
ஒன்பது மாதத்தில் உன் உதிரத்தோடு உதிரமாய் உதிர்ந்து போனதே உன் வாழ்க்கை.
இதற்கு தான் முன்னேறி வந்தாயா என் தங்கமே....
இந்த பொல்லாத உலகத்திற்கு....

எழுதியவர் : அருண்குமார்.செ (24-Jun-19, 5:09 am)
சேர்த்தது : அருண்குமார்
பார்வை : 256

மேலே