தேடுகிறான் அவளை
கண்ணே யுன்னைத் தேடுகிறேன்
காணா திங்கே வாடுகிறேன்,
விண்ணோ மண்ணோ எங்கெனினும்
உன்துணை தானே சொர்க்கமடி,
பண்ணோ டிசைந்த இசையுன்னைப்
பாடிக் களிக்கும் கலைஞன்நான்,
எண்ணிப் பார்க்க இனிக்குதடி
என்றும் வேண்டும் உன்துணையே...!
பெற்றோர் காணப் போனவளே
போது முந்தன் பிரிவதுவே,
உற்ற துணையெனைத் தவிக்கவிட்டு
உறவை மறந்தது ஏனடியோ,
கற்ற திலையோ பிரிவுத்துயர்
காட்ட லாமா என்னிடமே,
சுற்றம் பார்த்தது போதுமடி
சீக்கிரம் வந்து சேர்வாயே...!