ஆரோக்கிய பூமியை உருவாக்குவோம்

ஆற்றுப் படுகைகளை தூர்வாரி
ஆகாயப் பன்னீரை சேமிப்போம்
அள்ளிய கசடுகளை வயல்தூவி
நன்செய் புன்செய்களை வளம் செய்வோம்

ஆவினக் கழிவுகளை மக்கும் தழைகளை
புறக்கடை உரக்குழியில் எருவாக்குவோம்
மண்புழுக்களை உறவாக்கி மண்துளைகளை பெருக்கி
பூமி எங்கும் பசுமையை நிறைவாக்குவோம்

மக்கா நெகிழிகளை தொழிற்கூடக் கழிவுகளை
மறுசுழற்சியில் மறுமலர்ச்சி செய்திடுவோம்
எக்காலம் காக்கும் பயிர்த்தொழில் முறையை
பாடத்திட்டத்தில் செயல்முறையுடன் பயின்றிடுவோம்

கரிம சேர்மமற்ற சுவாசக் காற்று
காரீயம் மாசுகளற்ற தூயநீர் ஊற்று
இரசாயனம் இல்லா இயற்கை விவசாயம்
ஈந்திடும் பூமிக்கு ஆரோக்கிய எதிர்காலம்!

கவிதாயினி அமுதா பொற்கொடி

எழுதியவர் : வை.அமுதா (24-Jul-19, 9:53 pm)
பார்வை : 69

மேலே