ஆடி வெள்ளிக்கிழமையில்

ஆடி வெள்ளிக் கிழமையில்
அம்ம னருளை நாடியே
கூடி யொன்றாய் மங்கையர்
குலவை யிட்டுப் பாடிடத்
தேடி வந்தே அன்புடன்
தேவி வரங்கள் நல்குவாள்!
ஈடில் லாத எழிலுடன்
ஈச னோடு தோன்றுவாள்!!

மஞ்சள் முகத்தில் குங்குமம்
வட்ட மாகத் துலங்கிடும் !
கஞ்ச மலராய்ச் சிவந்திடும்
கனிவில் தாய்மை விளங்கிடும்!
நெஞ்ச முருகி வேண்டிட
நினைத்த தெல்லா மருளுவாள்!
தஞ்ச மென்று சரண்புக
தயவாய் மடியில் தாங்குவாள்!!

கோல விழியாள் கண்படில்
கோணல் முற்றும் விலகிடும் !
நீல கண்ட னிடப்புறம்
நேய மாக உறைபவள்
வேல னுக்குச் சிக்கலில்
வேல்கொ டுத்த தாயவள்
சூல மேந்தி வந்துநம்
துன்பச் சுமைய கற்றுவாள்!!

கும்பம் வைத்து வழிபடக்
குறைகள் நிவர்த்திச் செய்குவாள்!
மும்ம லங்க ளகற்றியே
முந்தை வினைகள் போக்குவாள்!
சிம்ம வாக னத்திலே
சிரித்த வண்ணம் வந்திடும்
அம்ம னருளை நாடுவோம்
அவனி போற்ற வாழுவோம் !!!

சியாமளா ராஜசேகர்

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (26-Jul-19, 6:58 pm)
பார்வை : 40

மேலே