பிழைக்கச் செய்திடு

விரல்களுக்குள்
மறைந்திருக்கும்
முகத்தினைக் காட்டு!
வெட்கத்தினை
தூர ஓட்டு!

அடிமேல் அடியெடுத்து
வைக்கும்
அற்புதம்தான் என்ன?!
முக நரம்புகளில் ஓடும்
வெட்கங்களின்
அளவுதான் என்ன?!

வார்த்தைகள்
தடுமாறுகின்றனவோ?!
உள்ளத்தின் சிரிப்புகள்
உதடுகளில் வழியும்
அழகுதான் என்ன?!

துப்பட்டாவின் முனை
உன்னிரு
விரல்களுக்கிடையில்
சிக்கித்தவிக்கும்
வலிதான் என்ன?!

நடக்கத் தெரிந்தவனின்
நடை பிறழ்வதும்
நீச்சல் தெரிந்தவன்
நீந்த இயலாமல்
போவதுபோல்
என் நிலைமை!

நீயுதிர்க்கும் அந்த
முதல் வார்த்தையினை
என் கைகளால்
ஏந்தி பிடிக்க
காத்திருக்கிறேன்!

குழல்களுக்குள்
சிக்கியிருக்கும் பூவினைப்போல்
குரல்களுக்குள்
சிக்கித்தவிக்கும்
வார்த்தைகளை உதிர்த்திடு!
என் காதலை
பிழைக்கச் செய்திடு!

எழுதியவர் : பெ.பரிதி காமராஜ் (22-Aug-19, 1:53 pm)
சேர்த்தது : paridhi kamaraj
பார்வை : 92

மேலே