என்னைத் தேடி
சில புதைக்கப்பட்ட உணர்வுகளை விழுங்கிக் கொண்டிருக்கும் இரவு நேரக் கண்ணீர் துளிகள்..!
தேக்கி வைக்க நினைக்கையில் இருளின் யதார்த்தங்களில் கொட்டித் தீர்க்கப்பட்ட வலிகளின் திரவியங்கள்..!
பெண்மனம் வலிமைதான்.., மெழுகாய் உணர்வுகளில் கரைந்து மீண்டும் திடமாகும் வலிமை ஆணிடத்தில் இல்லையன்றோ..?
உணர்வுகளை.., கண்ணீரைக் கடந்து வாழ்ந்த என் நாட்கள் இன்று இவற்றுள் குறுகிப் போக.., மீண்டும் என்னைத் தேடி நான்..!
உணர்வுகளற்ற மழலையாய் எல்லாவற்றிற்கும் புன்னகை பதில்களுடன் பொலிவடைந்த என் நாட்கள் இன்று கற்பனையிலும் கரைசேரா படகாய் பரிக்ஷித்து நிற்கிறது..!
இன்றெல்லாம் மாறிக்கொண்டிருக்கிறது.., என்னுடன் என் நாட்களும்..!
கண்ணீரின் அனுமதியின்றி அவ்வளவு எளிதில் கடக்க இயலவில்லை ஒவ்வொரு இரவுகளும்..,
தனிமைகளின் துணையின்றி நகரப்படுவதில்லை நாட்கள்..,
சாளரத்தில் வெறுமை விரக்திகளை விதைக்கும் அதிகாலை பேருந்தின் பயணம்..!
அனைத்தும் பக்குவப் பட்டுக் கொண்டிருந்தாலும் மாற்றங்களின் வலிகள் ரணமாகத்தான் கணக்கிறது..!