குறுந்தொகை குறிஞ்சித்திணை 141 வது பாடல்

பாடல் காட்சி

" இற்செறிக்கப்பட்டுழி இரவுக்குறி வந்தொழுகுந் தலைமகற்கு வரும் ஏதம் அஞ்சிப் பகற்குறி நேர்ந்த வாய்பாட்டான் அது [வு] மறுத்துச் சிறைப் புறமாகத் தோழிக்குத் தலைமகள் சொல்லியது. "

தலைவரை இனிப் பகற்குறிக்கண் வரும்படி நீ சொல்ல வேண்டும்.


இப்பாடலை எழுதியவர் : மதுரைப் பெருங் கொல்லன்

மதுரை பெருங்கொல்லன் என்பதில் மதுரையில் உள்ள புகழ்மிக்க கொல்லன் அல்லது கொல்லர் குழுவின் தலைவன் (guild chief) என்று கருதவேண்டியுள்ளது. மதுரை ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ச்சியாக மக்கள் வாழும் ஊராக உள்ளதா , இல்லை இது வேற மதுரையா எனத் தெரியவில்லை.

விளக்கம் :

வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே யன்னை யெனநீ
சொல்லி னெவனோ தோழி - கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சார னாட வாரலோ வெனவே.

மலைப்பக்கத்தையுடைய நாட்டில் உள்ள தலைவன் , தலைவியை இரவில் சந்திக்க எதையெல்லாம் தாண்டி வருகிறான் என்பதை
பாட்டின் நாலாவது வரியில் இருந்து தலைவி சொல்வது


'கொல்லை
நெடுங்கை வன் மான் கடும் பகை உழந்த

நெடுங்கை வன் மான் -
நெடிய கையையுடைய யானையால்

கடும் பகை உழந்த - கடிய பகையினால் வருந்திய

குறுங் கை இரும் புலிக் கோள் வல் ஏற்றை – குறிய கையையுடைய கொல்லுதல் வல்ல பெரிய ஆண்புலியானது,

பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்

பைங்கட் செந்நாய் - சிய கண்ணையுடைய செந்நாய்
படுபதம் பார்க்கும் - அகப்படுகின்ற காலத்தை பார்த்திருக்கும்

ஆரிரு ணடுநாள் வருதி - அந்த நேரத்தில் இருளையுடைய நடுயாமத்தில் வருகின்றாய்

வாரலோ வெனவே - அப்படி வருவதை விட்டு விட்டு


வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்

வளைவாய் சிறுகிளி - வளைந்த அலகையுடைய சிறு கிளிகளை

விளைதினைக் கடீஇயர் - விளைந்த திணைகளை சாப்பிடாமல் விரட்டும் பொருட்டு

செல்கென் றோளே யன்னை

நம் தாய், செல்க என்றாள்
யெனநீ
சொல்லி னெவனோ தோழி

என்று நீ தலைவனுக்கு சொல்வதால் வரும் குற்றம் என்ன ?

இரவில் வர வேண்டாம் , பகல்ல நான் தோட்டத்திலதான் இருப்பேன் , அப்ப சந்திக்கலாம்னு தலைவன்கிட்ட தோழியை விட்டு சொல்லும் பாட்டு தான் இது . ஒரு பாட்டு எப்படி காட்சிகளை கொடு வருது பாருங்க , காட்டுப் பாதை , பெரிய யானை , அந்த யானையை தாக்கும் அளவுக்கு புலி , செந்நாய் , இவற்றுக்கு நடுவில் மக்கள் இருந்திருக்காங்க , உள்ளம் நிறைய நிறைய காதலுடன் . ஊருக்குள்ள ஒரு யானை வந்துருச்சுனா அலறி அடித்து இப்ப ஓடுறோம் , என்ன செய்ய வேண்டும் என்ற அறிவோ , புரிதலோ இல்லை . நாமளும் பாவம் , யானையும் பாவம் .


பாட்டு மறுபடியும்


வளைவாய்ச் சிறுகிளி விளைதினைக் கடீஇயர்
செல்கென் றோளே யன்னை யெனநீ
சொல்லி னெவனோ தோழி - கொல்லை
நெடுங்கை வன்மான் கடும்பகை யுழந்த
குறுங்கை யிரும்புலிக் கோள்வ லேற்றை
பைங்கட் செந்நாய் படுபதம் பார்க்கும்
ஆரிரு ணடுநாள் வருதி
சார னாட வாரலோ வெனவே.

எழுதியவர் : பாவி (4-Oct-19, 9:48 pm)
சேர்த்தது : பாவி
பார்வை : 237

மேலே