பொங்கல் வாழ்த்து

பொங்கல் வாழ்த்து
...............................

நடிகரின்
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு படி தங்கக் காசு
கொடுத்த தமிழகம்
உழைப்பாளியின்
ஒரு படி உதிரத்திற்கு
ஒரு துளி தங்கக் காசுகூட
கொடுக்கவில்லை.

அன்று மட்டும் பொங்குவதால்
அதனை தெருவில் வைத்துக்
கொண்டாடுகிறோம்.
மற்ற நாள்களில்
தெருவில் நின்று
திண்டாடுகிறோம்.

விதைப்பது மட்டுமே
எங்களின் வேலை.
அறுவடை செய்யும்
வேலையை
இயற்கை
எங்களுக்குக் கொடுப்பதே
இல்லை.

எங்கள் உதிரத்தை
கரும்பாய் சுவைத்து விட்டு
இனிக்கிறது என்கிறீர்கள்.
அதன் கசப்பு
எங்களுக்குதானே தெரியும்.

நாங்கள் உழைக்க
நீங்கள் பொங்கல்
கொண்டாடுகிறீர்கள்.

உழைத்தவன்
ஓடாகி விட்டான்.
உழைக்காதவன்
மேடாகி விட்டான்.

என்றபோதிலும்
இடுக்கண் வருங்கால் நகுக
என்றான் வள்ளுவன்.
எனவே கொண்டாடுகிறோம்
பொங்கல் நல்வாழ்த்துகள்.

- கேப்டன் யாசீன்
கேப்டன் பதிப்பகம்

எழுதியவர் : கேப்டன் யாசீன் Captain Yaseen (15-Jan-20, 12:44 pm)
Tanglish : pongal vaazthu
பார்வை : 189

மேலே