புத்தகக் கண்காட்சி – கடிதங்கள்-------------------ஜெ மின்னஞ்சல் தொகுப்பு

புத்தகக் கண்காட்சி, கருத்துரிமை பற்றிய கட்டுரை கூர்மையானது, நேரடியானது. இப்படி நேரடி யதார்த்தத்தைக் கூட எவராவது புட்டுப்புட்டு வைக்காமல் முடியாது என்ற நிலையே இன்றுள்ளது. புத்தகக் கண்காட்சியில் மு.க வந்தபோது பழ.கருப்பையா எழுதிய விமர்சனநூலை எல்லாம் பொறுக்கி எடுத்து கண்மறைவாக வைத்ததெல்லாம் நல்ல நினைவில் இருக்கிறது.

புத்தகக் கண்காட்சி தானாக உருவான ஒரு நிகழ்வு. எந்த அரசு ஆதரவும் இல்லை. இணையம் வந்ததும் தினமணிபோன்ற நாளிதழ்கள் நிறைய ஆதரவு அளித்ததும்தான் அது வளர்ந்ததற்குக் காரணம். நடுவே சிலபேர் அதைக்கொண்டு தனிப்பட்ட லாபம் ஈட்ட நினைத்தார்கள். கருணாநிதி அள்ளிக்கொடுப்பார் என நினைத்தார்கள். ஆகவேதான் கருணாநிதியின் காலடியில் கொண்டு புத்தகக் கண்காட்சியை வைத்தார்கள். புத்தகக் கண்காட்சியே கருணாநிதி -இடதுசாரிகளுக்குரியது என்ற சித்திரம் உருவாகியது.

ஆகவேதான் ஜெயலலிதா அதை கண்டுகொள்ளவே இல்லை. அந்தம்மாவை சந்திக்க தலையால் தண்ணீர் குடித்தார்கள். நடக்கவில்லை. ஆனால் அந்தம்மா புத்தகம் படிக்கும் பழக்கம் கொஞ்சம் இருந்தவர்கள். ஆகவே எதிர்ப்பாக ஒன்றும் செய்யவில்லை. அந்தம்மா இதை நிறுத்தவேண்டும் என நினைத்திருந்தால் ஒரு சொல்லே போதுமாக இருந்திருக்கும்.

இன்றைக்கு இப்போதுள்ள அரசாங்கத்தின் காலடியில் விழவேண்டியிருக்கிறது. ஒரு சின்ன அரசாணைபோதும் மொத்த புத்தகக் கண்காட்சியும் நின்றுவிடும். நின்றால் நிற்கட்டுமே என்றுதான் திமுகக்காரர்கள் இடதுசாரிகள் சொல்வார்கள். அவர்களால் இன்னொன்றை உருவாக்க முடியாது. இன்றைக்கு பபாசியின் மேடையில் ஏறிநின்று அரசை வசைபாடுகிறார்கள். புத்தகக் கண்காட்சி வளாகத்தை அரசியல்களமாக ஆக்குகிறார்கள். அரசின் பகை வந்தால் புத்தகக் கண்காட்சி அழியும். இவர்கள் வேறுவேலைபார்க்கச் சென்றுவிடுவார்கள்.

இந்த புத்தகக் கண்காட்சியில் அரசை ஆதரிக்கும் நூல்கள் மட்டுமா உள்ளன? இருக்கும் நூல்களில் பாதிப்பங்குக்கு மேல் எதிர்ப்பு நூல்கள்தான். ஆனால் அவை நூல்களாக இருக்கவேண்டும். அரசியல் ஆர்ப்பாட்டம் போராட்டம் என்றெல்லாம் சென்றால் அரசு நடவடிக்கை எடுக்கத்தான் செய்யும். எந்த அரசும் அதைத்தான் செய்யும். இதைச்சொன்னால் இந்த அரசியல்போராட்டக்காரர்களுக்கு புரிவதில்லை. உங்கள் எதிர்ப்பை அரசிடம் காட்டுங்கள் புத்தகக் கண்காட்சியை அழிக்க வேண்டாம் என்றுதான் மன்றாடிக் கேட்டுக்கொள்ளவேண்டியிருக்கிறது

அரசியல்சார்பு கொண்டவர்கள் பலர் எழுதுவதைப் பார்த்தால் பரிதாபமாக இருக்கிறது. நாடே எரிகிறது புத்தகவாசிப்பு ஒரு கேடா என்கிறார்கள். போராடாமல் புத்தகம் விற்பவர்கள் துரோகிகள் என்கிறார்கள். புத்தகம் வாங்க வருபவர்கள் துரோகிகள், சூடுசொரணை அற்றவர்கள் என்கிறார்கள். இவர்களெல்லாம் ஏதோ போராட்டப்புரட்சி மட்டும் செய்துகொண்டிருப்பதுபோல கூச்சலிடுகிறார்கள். மொத்தமாக இவர்களின் நோக்கமே புத்தகக் கண்காட்சியை அழிப்பதுதானா என்று தோன்றுகிறது.

எம்
----------------
2
இவ்வளவு பெரிய அளவில் நடைபெறும் புத்தகக் கண்காட்சி நிச்சயமாக மிகப் பயனுள்ளதும், ஒரு பெரிய அடையாளமும்தான். இன்றய அரசியல் சூழலில் ஆட்சியாளர்களுக்கு இணங்கிப் போவது எல்லா இடங்களிலும் நடப்பதே. நீங்கள் சொன்ன தி.மு.க. காலத்து அடாவடிகளோடு ஒப்பிடும்போது இன்று எவ்வளவோ பரவாயில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

மேலும் நீங்கள் குறிப்பிட்ட முக்கியமான விஷயம், கண்காட்சியில் மதநிறுவனங்கள், மடங்கள், அரசியல் பிரச்சார கடைகள் போன்றவை கணிசமான அளவுக்கு இருக்கின்றன. இவைகள் போதாதென்று புத்தகங்களை வாங்கி விற்கும் நிறுவனங்கள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் போன்றவைகளும் இடத்தை அடைக்கின்றன. இதுபோன்றவர்களை கணக்கிட்டால் ஒரு பெரிய லிஸ்டே வரும்போல.

Dial For Books, Marinabooks, Panuval Store போன்றவைகள் பதிப்பகங்கள் அல்ல. வாங்கி விற்கும் நிறுவனங்கள். இவர்கள் இங்கே வந்து கடை போடுவது அர்த்தமற்றது. இவர்கள் நகருக்குள் கடை வைத்திருக்கிறார்கள், ஆண்டுமுழுவதும் இணையதளத்தில் புத்தகங்கள் விற்கிறார்கள். அவை போதாதா ? Dial For Books பெரும்பாலும் கிழக்கு பதிப்பகத்தின் நூல்களையே விற்கிறார்கள். அதான் கிழக்கு பதிப்பகம் தனியாக கடை போட்டிருக்கிறார்களே, பின்பு அதே நூல்களை வேறு இடத்தில் வைத்து விற்கவும் வேண்டுமா ? பிரம்மாண்டமாக இருக்க வேண்டும் என்பதற்காக கேட்பவர்களுக்கெல்லாம் அனுமதி கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள் போல.

Sura College of Competition என்பது போட்டித் தேர்வுகளுக்கான தகவல் களஞ்சியங்களை விற்பவர்கள். இவர்கள் தான் தமிழ்நாடு முழுக்க விரவிக்கிடக்கிறார்களே ! சென்னை அண்ணா நகர் முழுக்க ‘ஐஏஎஸ் நகர்’ என்று சொல்லுமளவிற்கு வளச்சுக் கட்டியிருக்கிறார்கள். பின்பு இங்கு வந்து கடை போட்டு என்ன செய்யப்போகிறார்கள் ?

வர்த்தமானன் பதிப்பகம் பல தமிழ் நூல்களை சொந்தமாக வெளியிட்டு வருகிறார்கள். சமீபத்தில் சிவில் சர்வீஸ் தேர்வுகளுக்கான நூலகளும் வெளியிடுகின்றனர். ஆனால் இந்நூல்கள் வெறும் ‘தகவல் குப்பை’களல்ல. அவை வாசிக்கும் நோக்கில் ஆக்கப்பட்டவை. சென்ற ஆண்டும் இவ்வாண்டும் அவர்களைத் தொடர்புகொண்டு கேட்டபோது கடை போடவில்லை என்றார்கள். அவர்களாகப் போடவில்லையா அல்லது தன்னறத்துக்கு வந்த சிக்கல் போன்று ஏதேனும் உள்ளதா எனது தெரியவில்லை. தன்னறத்துக்கு இடமளிக்காதது கண்டிக்கத்தக்கது.

இதுபோன்று பல விமர்சனங்கள் இருந்தாலும், யாரு என்ன கடை போட்டா நமக்கென்ன, நமக்கு தேவையானது கிடைச்சா போதும் என்ற நிலையில் ஒரு கொண்டாட்ட மனநிலை வந்துவிடுகிறது. நாளை சென்னை செல்கிறேன். மூன்று நாள் ப்ளான்.

விவேக்
-------
3
புத்தகக் கண்காட்சி – கருத்துரிமை பற்றிய செய்திகளை வாசித்தேன். எனக்கு இதுவே தோன்றியது. சென்ற பல ஆண்டுகளாகவே புத்தகக் கண்காட்சியைக் கைப்பற்றும் முயற்சிகள் நடைபெறுகின்றன. புத்தகக் கண்காட்சியை எப்போதும் அரசுசார்பானவர்களே நடத்துவார்கள். நாளை திமுக வந்தால் இதுவே திமுக விழா போல ஆகிவிடும். இப்படி அரசியலை கலந்தால் நாளடைவில் இங்கே இலக்கியமோ அறிவுச்செயல்பாடோ இல்லாமலாகிவிடும்.

சு.வெங்கடேசன் எம்பி கீழடி பற்றி பேசவந்த இடத்தில் அரசை கண்டித்துப் பேசினார். மிகக் கடுமையான கண்டனம். கூடவே அரங்கிலிருந்தும் கூச்சல்கள். இனி இதை எல்லாரும் செய்வார்கள். கைதட்டல் கிடைக்கும். மேடைகளை கைப்பற்றுவார்கள். இது தவறான முன்னுதாரணம். இனி எல்லாரும் இப்படி பேச ஆரம்பித்தால் அரசு எதிர்ப்பு தெரிவிக்கும். ஒரு போலீஸ் உத்தரவை போட்டலே புத்தகக் கண்காட்சியைக் காலிபண்ணிவிடலாம்.

அதை அஞ்சி இனி இவரைப் போன்றவர்களைக் கூப்பிடாமலிருந்தால் இடதுசாரிகளைப் புறக்கணிக்கிறார்கள் என்று கூச்சல் எழும். எடப்பாடி வந்ததற்கு கேலியும் கிண்டலும் செய்கிறார்கள். அவர் தமிழக முதல்வர். நீங்கள் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும். ஆனால் மதுரை புத்தக விழாவை பார்வையிட அழகிரி ஏன் வந்தார்? அவருக்கு எழுதப்படிக்க தெரியுமா என்ன?

இவர்கள் செய்வதை எதிர்த்து அதிமுகவும் பாஜகவும் இதே புத்தகக் கண்காட்சிக்கு வந்த கூச்சலிட ஆரம்பித்தால் என்ன செய்ய முடியும்? இவர்கள் தங்கள் அரசியலை தெருவில் வைத்துக்கொள்ளட்டும். இங்கே கூட்டம் வருகிறது என்று இங்கே வந்து கூச்சலிடுகிறார்கள். இவர்களின் இந்த அரசியலால் இங்கே எதையுமே பேசமுடியாமலாகி விடுகிறது. இவர்களின் கூச்சலுக்கு ஒத்துபோகாமல் வேறு எதைப்பேசினாலும் இவர்களின் பார்வையில் அது துரோகம்தான். உண்மையில் கருத்துரிமைக்கு எதிரானவர்கள் இவர்கள்தான்.

டி.ராஜ்குமார்

-------
4
நீங்கள் புத்தகக் கண்காட்சியைப் பற்றி எழுதியதை ஒட்டி ஒரு கேள்வி எழுந்து எங்கள் நண்பர் வட்டாரத்திலே பேசப்பட்டது – அரசியல் பேசப்படாத ஒரு தளம் இருக்கமுடியுமா? அரசியல் அண்டாமல் கருத்துச்செயல்பாடு நடைபெற முடியுமா? அது இயல்பாக இருக்குமா?

இல்லை என்றே அரசியல்வாதிகள் சொல்வார்கள். அரசியல் இல்லாத இடமே இல்லை என்பார்கள். அரசியல் இல்லாத இடம் தேவையில்லை, இருக்கவிடமாட்டோம் என்பதே அதன் பொருள்

அரசியல் தேவை. அரசியலுணர்வும்தேவை. ஆனால் அதைத்தவிர வேறேதும் தேவையில்லை என்பது அப்பட்டமான ஃபாஸிஸம். அதுவும் எங்கள் அரசியல் மட்டுமே எங்கும் தேவை என்பது ஃபாஸிசத்தின் உச்சம். அதுவே இங்கே நடைபெறுகிறது.

இங்கே இருப்பது அதிகார அரசியல். இருதரப்பும் வெறிகொண்டிருக்கின்றன. வேறெந்த மூச்சொலியும் கேட்கக்கூடாது என்கின்றன. ஆனால் இந்த அரசியலுக்கு அப்பாலும் சில இடங்கள் இருந்தாகவேண்டும். சில நுட்பமான அந்தரங்கமான இடங்கள்

சுதந்திரப்போர் உச்சத்திலிருந்த காலகட்டத்தில்கூட தத்துவவிவாதம், மொழியாக்கம் எல்லாம் அதனுடன் சம்பந்தமில்லாமல் நடந்துகொண்டிருந்தன. அதைச்செய்தவர்களில் பலர் அன்றைக்கு துரோகிகள் என்றுகூட பழிக்கப்பட்டார்கள். ஆனால் இன்று அவர்களின் சாதனைகளே நின்றுகொண்டிருக்கின்றன. உதாரணம் உவேசா

ஆகவே இந்தக் கூட்டம் எல்லாவற்றையும் தங்கள் அரசியலாக ஆக்குவதை தடுக்கத்தான் வேண்டும். இதற்கு அப்பால் தன் தனியான தேடலையும் தவத்தையும் இயற்றும் ஒரு வெளியை நாம் பேணிக்கொள்ளவே வேண்டும்

எனக்கு பறவையியலில் ஈடுபாடு. அதற்காகத்தான் நான் புத்தகம் வாங்கவந்தேன். [நாம் விசும்பு வழியாக சந்தித்துக்கொண்டோம்] என்னை தடுத்து என் கையில் துண்டுப்பிரசுரம் தருகிறார்கள். நான் கண்டுகொள்ளாமல் போனபோது ஒருவர் என்னை பெட்டை என்று பழித்தார். நான் தலைகுனிந்து நடந்து உள்ளே போனேன். புத்தகம் பார்க்கமுடியாமல் ஒரே கூச்சல். குழப்பம். பல மதங்களின் ஸ்டால்கள். ஆளுக்காள் மதக்கூச்சல். புத்தகக் கண்காட்சியில் மதச்சண்டை தொடங்கினாலும் ஆச்சரியப்படமாட்டேன். மனம் நொந்து வெளியே வந்துவிட்டேன்

ஜெயக்குமார் அர்விந்த் .

--------------
படித்தது
நம் சிந்தனைக்கு

எழுதியவர் : ஜெ மின்னஞ்சல்கள் (17-Jan-20, 8:12 pm)
பார்வை : 60

சிறந்த கட்டுரைகள்

மேலே