நிர்பயா

பாலியல் வன்கொடுமைக்கு
பலியான பெண்ணுடைய -
தாயின் இதயம் உடைந்துபோனது -
ஒரு வருடமாக அல்ல
இரண்டு வருடமாக அல்ல
ஏழு வருடங்களாக - இன்னும்
ஏழேழு ஜென்மகளாகுமோ..?
நீதி கிடைக்க...?

தாய்ப்பசுவின் மணியோசை கேட்டு -
அன்று கன்றின் இழப்பிற்கு -
தன் மகனென்றும் பாராமல்
தண்டனையை உடனடியாக வழங்கினான்
மன்னன் மனுநீதிச் சோழன் - இன்று
எத்தனையோ மனு கொடுத்தாள் தாய் -
உடனடி தீர்ப்பு வேண்டி.... - ஆனால்
உடனடி தீர்ப்பு தள்ளிப்போகின்றது....

அது ஏனோ தெரியவில்லை - சில
அதிகார வர்க்கத்திற்கு
எதிராக தீர்ப்பெழுதும் போதுமட்டும்
எழுதுகோலிலின்
எழுத்து 'மை' தீர்ந்து போய்விடுகின்றது
இல்லையேல் - எழுதுகோல்
இருக்குமிடமே தெரியாமல் போய்விடுகின்றது...

இங்கே -
அவளின் தாயின் இதயம் மட்டுமல்ல
அவளின் தாயின்நிலையிலே
அனைவரின் இதயமும் உடைந்துபோகின்றது.....!!!

- நட்புடன் நளினி விநாயகமூர்த்தி

எழுதியவர் : நளினி விநாயகமூர்த்தி (1-Mar-20, 7:10 pm)
பார்வை : 113

மேலே