குமரேச சதகம் - இருந்தும் பயன் படாதவை - பாடல் 26

பன்னிருசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

தருணத்தில் உதவிசெய் யாதநட் பாளர்பின்
தந்தென தராமல்என்ன
தராதரம் அறிந்துமுறை செய்யாத மன்னரைச்
சார்ந்தென்ன நீங்கிலென்ன

பெருமையுடன் ஆண்மையில் லாதஒரு பிள்ளையைப்
பெற்றென பெறாமலென்ன
பிரியமாய் உள்ளன்பி லாதவர்கள் நேசம்
பிடித்தென விடுக்கிலென்ன

தெருளாக மானம்இல் லாதவொரு சீவனம்
செய்தென செயாமலென்ன
தேகியென வருபவர்க் கீயாத செல்வம்
சிறந்தென முறிந்துமென்ன

மருவிளமை தன்னிலில் லாதகன் னிகைபின்பு
வந்தென வராமலென்ன
மயிலேறி விளையாடு குகனேபுல் வயல்நீடு
மலைமேவு குமரேசனே. 26

- குருபாததாசர் என்ற முத்துமீனாட்சிக் கவிராயர்

பொருளுரை:

மயிலேறி விளையாடு குகனே புல்வயல் நீடு மலைமேவு குமரேசனே!

காலத்திலே துணை புரியாத நண்பர்கள் காலங் கடந்த பிறகு துணை புரிந்தென்ன பயன்? துணை புரியாமையாலும் என்ன கெடுதல்? ஏற்றத் தாழ்வு கண்டு முறை கூறாத அரசர்களை அடுத்திருப்பதால் என்ன பயன்? நீங்கிவிட்டால் என்ன கெடுதல்?

தகுதியும் வீரமும் இல்லாத ஒரு மகனைப் பெற்றுப் பயன் என்ன? பெறாவிட்டால் கெடுதி என்ன? விருப்பத்துடன் உள்ளத்திலே அன்பு இல்லாதவர்களின் நட்பைப் பெற்றால் என்ன? பயன் பெறாவிட்டால் என்ன கெடுதி?

அறிவுடன் மானமும் இல்லாத வாழ்க்கை நடத்தி என்ன பயன்? விட்டுவிட்டால் என்ன கெடுதல்?
பிச்சை யென்று வருகின்றவர்களுக்குக் கொடாத செல்வம் சிறப்புற்றால் என்ன பயன்? அழிந்தால் என்ன கெடுதல்?,

சேர்க்கையை விரும்பும் இளமைப் பருவத்திலே கிடையாத பெண் முதுமையிலே கிடைத்துப் பயன் என்ன? கிடையாமற் போனால் என்ன கெடுதி?

கருத்து:

நண்பர்கள் காலத்திலே துணைபுரிதல் வேண்டும்.
அரசர்கள் தரமறிந்து முறைவழங்கல் வேண்டும்.

பெருமையும் ஆண்மையும் பிள்ளைகட்கு வேண்டும்.
உள்ளன்புடையோர் நட்புவேண்டும்.

அறிவுடனும் மானத்துடனும் வாழவேண்டும்.
ஐயமிட்டு வாழவேண்டும்.
இளமையிலே மணம்புரிதல் வேண்டும்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (6-May-20, 8:52 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 41

சிறந்த கட்டுரைகள்

மேலே