452 நாள் செலவு என்பது நம் உயிர்ச் செலவே - அறஞ்செயல் 4

அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
(காய் 4 / மா தேமா)

தினங்க(ள்)செலச் செலவேதோ பெற்றதுபோன் மகிழுநெஞ்சே
--தினங்க ளோடுங்
கனங்கொளுமுன் னாயுள்நாள் கழிவதுண ராயுயிர்தீர்
..காயஞ் சேரும்
வனங்கடுகி வாவென்ன விளித்துன்பால் தினநெருங்கும்
..வன்மை யுன்னி
முனங்கொளறி யாமையைநீ யினங்கொள்ளா தறஞ்செய்ய
..முயலு வாயே. 4

- அறஞ்செயல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்

”நாட்கள் செல்லச் செல்ல ஏதோ புதிதாகப் பெற்றது போல மனம் மகிழும் நெஞ்சே!

செல்லும் நாட்களுடன் அருமையான உன் வாழ்நாளும் செல்வதை நீ உணரவில்லை.

உயிர் நீங்கிய உடம்பு சென்று சேரும் காடு, விரைந்து வா என்று உன்னை நாள்தோறும் நெருங்கி அழைக்கின்றது.

அதை நினைந்து இதுவரையும் கொண்டுள்ள அறியாமையை இன்னமும் நீ கொள்ளாமல் புண்ணியம் செய்ய முற்பட வேண்டும்” என்கிறார் இப்பாடல் ஆசிரியர்.

கனம் - அருமை. காயம் - உடம்பு. வனம் - சுடுகாடு. கடுகி - விரைந்து. விளித்து - அழைத்து.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (7-May-20, 12:04 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 53

சிறந்த கட்டுரைகள்

மேலே