மகளுக்குள்
வயிற்றில் கருவாய்
நீ தோன்ற
கூடியது இதய துடிப்பு...
கையில் சிசுவாய்
நீ தோன்ற
பொங்கியது கண்ணீர்...
முகம் பார்த்து
நீ சிரிக்க
என் கண்களிலும் புன்னகை...
தரையில் தவழ்ந்து
நீ விளையாட
நொடியும் உன்னை விட்டு
விலகாது என் கண்கள்...
கை அசைத்து
நீ பள்ளி செல்ல
வாட்டியது தனிமை...
புத்தகம் எடுத்து
நீ படிக்க
நானும் கற்றேன் உன்னோடு...
பெரிய மனுசியாய் நீ...
இப்போதுதான் உணர்ந்தேன்
என் வயதின் பொறுப்பை...
தேடி தேடி வெட்டிய
வெள்ளை முடியை
இப்போது மெல்ல
தொட்டுப் பார்க்கிறேன்...
இப்போது அது என்
வயதைக் காட்டவில்லை
நான் வாழ்ந்த
அழகான வாழ்க்கையின் வருடங்களை...