ஆன்மீகம்
இறைவா!
மூலபொருளான உன்னை மூவாயிரம் முறை உச்சரித்தால் காண இயலும் என கதைக்கிறார்கள்
இறைவா!
திருவருளான உன்னை திவ்யதேசம் சென்று ஆராதனை செய்தால் பேரருள் கிடைக்கும் என புகட்டுகிறார்கள்
இறைவா!
ஆதியான உன்னை ஆகமம் முறையாய் படித்தால் ஆன்மபலம் கிடைக்கும் என அறைக்கூவலிடுகிறார்கள்
இறைவா!
மனதை அசுத்தமாய் வைத்து வாசலில் மாக்கோலமிட்டு மகேசனை அழைத்தால் வருவான் என மாயை செய்கிறார்கள்
இறைவா!
எள்ளுக்குள் எண்ணெய்யாயிருக்கும் உன்னை எளிதில் சரணடையலாம் என சாயம் பூசுகிறார்கள்
இறைவனையும் விலைபொருளாய் விற்கும் வேடிக்கை விந்தையடா?
அந்தோ! பாவம்
நீ சற்றே கண் அயர்ந்தால் உனக்கும் காவிவேட்டி கட்டி கலியுக சித்தரென்று
காலடியில் மக்களை விழவைக்கும் வணிகர் சந்தையடா!
இறைவனை நீ தேடி அலையாதே! இறைவனை உன் இதயத்தில் வசிக்க வை அன்பு எனும் கோவிலினால்.
சரவிபி ரோசிசந்திரா