வீழ்ந்து விடுவோமா எழுந்து வருவோமா
காலத்தின் கொடுமைதான் இன்று நம்மைக் காட்டாறாய்க் கடக்கிறதே.
நோய்த் தொற்று ஒன்று வந்து நம் வாழ்வைக் குலைக்கிறதே.
மருந்தில்லை என்றார்கள் மனம் நொந்து போனோமே.
வீட்டிலிரு என்றார்கள் விலகி இரு என்றார்கள்.
விளக்கேற்றச் சொன்னார்கள் கைத்தட்டி இருந்தோமே.
அத்துணையும் வீண் என்றே அழுது மனம் நொந்தோமே.
என்ன செய்தால் தீர்வு வரும் என்றெண்ணி நின்றோமே.
வேலை இல்லை, வரவு இல்லை, பள்ளியில்லை பாடமில்லை.
வேறு நாடு சென்றவரும் தன் தாய் நாடு திரும்பினரே.
கொன்றொழிக்கும் நோய்கள், எல்லைகளில் மிரட்டல்,
வாழ்வழிக்கும் பேரிடர், வகைவகையாய் உட்பூசல்
இந்தியாவின் பெரும் வளர்ச்சி இன்றோடு அழிந்ததாக
அண்டை நாடுகள் கொக்கரித்து கண் துஞ்ஞா காண்கின்றனர்
மக்கள் சக்தி ஒன்றினைந்தால் மகத்தான வெற்றியே
என்றுரைத்த தலைவர்களின் மனம்போல இருக்கின்றோம்
பன்மடங்கு துயர் கொண்டு அவை வெல்லும் திறன் கண்டு
இணையத்தில் இணைகின்றோம்
குரல் கொடுத்து உயர்கின்றோம்
கனவுகள் பல கண்டு வல்லரசாய் வளர்கின்றோம்
வெட்டி வெட்டிச் சாய்த்தாலும் துளிர் விட்டு முளைப்போமே
எம்முறை எழுந்தாலும் இமயம் தொட்டு உயர்வோமே
இனி வரும் காலமே எழுச்சியாய் மலருமே
பொருமையின் வெற்றியே பன்மடங்காய்ப் பெருகுமே
இனி வீழமாட்டோம் எப்பொழுதும்
எழுந்து வருவோமே என்றென்றும்