செல்வ முடைக்கும் படை மூன்று – திரிகடுகம் 38
நேரிசை வெண்பா
தன்னை வியந்து தருக்கலுந் தாழ்வின்றிக்
கொன்னே வெகுளி பெருக்கலும் - முன்னிய
பல்பொருள் வெஃகுஞ் சிறுமையும் இம்மூன்றுஞ்
செல்வ முடைக்கும் படை 38
- திரிகடுகம்
பொருளுரை:
ஒருவன் தன்னைத் தானே பெருமைப்பட்டு கர்வப்படுவது, பணிவின்றி வீணாக சினத்தைப் பெருகச் செய்வது, விரும்பிய பலவகைப் பொருள்களையும் விரும்புகின்ற சிறுமைத் தன்மை ஆகிய இந்த மூன்றும் ஒருவன் செல்வத்தை அழிக்கும் கருவியாகும்.
கருத்துரை:
தற்புகழ்ந்து செருக்குவதும், வீணாகச் சினங் கொள்வதும், பிறர் பொருளை விரும்புவதும் செல்வத்தைத் தேய்க்கும் படையாகும்.
முன்னிய - முற்பட்ட என்பதுமாம்.
தன்னை வியத்தலால் அடக்கமின்மையும், வெகுளி பெருக்குதலால் துணையாயினவர் பிரிவும், பல பொருளையும் விழைதலால் குற்றமும் விளங்கும் என்பதாகும். இம்மூன்றும் படையென்று உருவகிக்கப்பட்டன.
தருக்கல்: being self-conceited etc, போற்று, மெச்சு, ரசி, வியந்து: admire :