சான்றோர் குரம்பெழுந்து குற்றங்கொண்டு ஏறார் – நாலடியார் 153
நேரிசை வெண்பா
('ள்' 'ய்' இடையின எதுகை)
நரம்பெழுந்து நல்கூர்ந்தா ராயினுஞ் சான்றோர்
குரம்பெழுந்து குற்றங்கொண் டேறார்; - உரங்கவறா
உ'ள்'ளமெனும் நாரினாற் கட்டி உளவரையாற்
செ'ய்'வர் செயற்பா லவை. 153
- மேன்மக்கள், நாலடியார்
பொருளுரை:
உடல் மெலிந்து நரம்பு மேலே தோன்றும்படி வறுமை எய்தினாரானாலும் மேன்மக்கள் தமது நல்லொழுக்கத்தின் வரம்பு கடந்து பிழையான வழிகளை மேற்கொண்டு அவற்றில் தொடர்ந்து செல்லமாட்டார்.
அறிவே பனை விட்டமாக, முயற்சியென்ற நாரினால் அத்தீய நினைவைக் கட்டுப்படுத்தி, செய்தற்குரிய நற்செயல்களைத் தமக்குள்ள பொருள் அளவில் செய்து வருவர்.
கருத்து: வறுமையினால் மேன்மக்கள், தவறிய வழிகளில் செல்லமாட்டார்கள்.
விளக்கம்:
நார் என்று வந்தமையாற் கவறுஎன்பது பனைவிட்டத்துக்கு ஆயிற்று; பிளவுள்ள பனம்பட்டை கவறு எனப்படும்.