சான்றவர் தொல்வழிக் கேண்மையிற் தோன்றப் புரிந்தியாப்பர் – நாலடியார் 154
இன்னிசை வெண்பா
செல்வுழிக் கண்ணொருநாட் காணினுஞ் சான்றவர்
தொல்வழிக் கேண்மையிற் தோன்றப் புரிந்தியாப்பர்;
நல்வரை நாட! சிலநாள் அடிப்படின்
கல்வரையும் உண்டாம் நெறி. 154
- மேன்மக்கள், நாலடியார்
பொருளுரை:
உயர்ந்த மலைகளை உடைய நாடனே!
சில நாட்கள் நடந்து கால்த்தடம் பட்டுப் பழகியதானால் கல்லால் ஆன மலையிலும் வழி உண்டாகப் பெறும்.
அது போல, வழிச் செல்லும் காலத்தில் ஒருவரை ஒருநாள் பார்க்க நேரிட்டாலும், மேன்மக்கள் முன்பு கொண்ட நேயம் போல தோன்ற அன்பு செய்து அவரைப் பிணிப்பர்.
கருத்து:
ஒரு நாள் பழகினாலும், சான்றோர் பிறர் உள்ளத்தைக் கவர்ந்து விடுவார்.