அறிவ தறிந்தார் அறத்தின் வழுவார் நெறிதலை நின்றொழுகு வார் – அறநெறிச்சாரம் 69
நேரிசை வெண்பா
மக்கள் உடம்பு பெறற்கரிது பெற்றபின்
மக்கள் அறிவும் அறிவரிது - மக்கள்
அறிவ தறிந்தார் அறத்தின் வழுவார்
நெறிதலை நின்றொழுகு வார் 69
– அறநெறிச்சாரம்
பொருளுரை:
மக்கட் பிறப்பினை அடைதல் அருமை; பிறந்தாலும் மக்களுணர்வாகிய ஆறறிவினையும் அடைதல் அதனினும் அருமை; ஆறறிவினையுமுடையராய்ப் பிறந்து அறியவேண்டியதை அறிந்தவர் அறநெறியிற் சிறிதும் வழுவார்; அன்றியும் அறநெறியை மேற்கொண்டு அதனுக்கேற்ப நடப்பார்.
குறிப்பு:
“மக்கள் தாமே ஆறறி வுயிரே” என்பராகலின், ‘மக்கள்’ என்பதற்கு, ‘ஆறறிவினையும் உடையராய்’ என்று பொருளுரைக்கப்பட்டுள்ளது.