ஒள்ளிய ஒற்றாள் குணம் மூன்று – திரிகடுகம் 85

இன்னிசை வெண்பா

எள்ளப் படுமரபிற் றாகலும் உள்பொருளைக்
கேட்டு மறவாத கூர்மையும் முட்டின்றி
உள்பொருள் சொல்லும் உணர்ச்சியும் இம்மூன்றும்
ஒள்ளிய ஒற்றாள் குணம் 85

– திரிகடுகம்

பொருளுரை:

தன் செய்கை பகைவரால் நன்கு மதிக்கப்படாத முறையை உடையதாதலும். அப்பகைவரிடத்து நடந்துள்ள காரியத்தைக் கேட்டுப் பின் மறவாத கூரறிவுடைமையும், அப்பொருளைத் தடையின்றித் தன் அரசனுக்குச் சொல்லுகின்ற தெளிவுடைமையும் ஆகிய இம்மூன்றும் அறிவுள்ள வேவுகாரனது தன்மையாம்.

கருத்துரை:

பகைவன் நாட்டில் தான் இருந்து செய்யும் செய்கை பிறர் கருதத் தக்கது ஆகாதபடி செய்தலும், அவன் கருத்தறிந்து மறவாதிருத்தலும் அக் கருத்தை அரசர்க்குச் செவ்வையாகத் தெரிவிக்கும் வலிமை பெற்றிருத்தலும் வேவுகாரர்க்குரிய குணங்களாம்.

உள் பொருள் - உண்மையாகிய பொருள்:

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (22-Mar-22, 9:35 pm)
பார்வை : 25

சிறந்த கட்டுரைகள்

மேலே