பான்மொழியார் இன்கண் பெருகின் இனம்பெருகும் – நான்மணிக்கடிகை 91

இன்னிசை வெண்பா

வன்கண் பெருகின் வலிபெருகும் பான்மொழியார்
இன்கண் பெருகின் இனம்பெருகும் சீர்சான்ற
மென்கண் பெருகின் அறம்பெருகும் வன்கட்
கயம்பெருகிற் பாவம் பெரிது. 91

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

அஞ்சாமை மிகுந்தால் வலிமையும் ஒருவனுக்கு மிகும்;

பால்போலும் இனிய சொல்லையுடைய மனைவியரிடம் இனிய கண்ணோட்டம் பெருகுமானால் நல்ல சுற்றத்தார் பெருகுவர்;

சிறப்பு மிக்க அருட்தன்மை மிகுமானால் அறவினைகள் மிகும்;

கொடுமையையுடைய கீழ்மைத்தனம் மிகுமானால் தீ வினைச்செயல் மிகுதியாம்.

கருத்து:

அஞ்சாமை மிகுந்தால் வலிமை மிகும்; மனையாளிடம் கண்ணோட்டம் மிகுந்தால் இனம் பெருகும்; அருளிரக்கம் மிகுந்தால் அறம் மிகும்; கீழ்மைக் குணம் மிகுந்தால் தீவினை மிகும்.

விளக்கம்:

வன்கண் – அஞ்சாமைப் பொருட்டாதல்: அஞ்சாமையென்னும் உள்ள வலிமை உடம்புக்கு வலிமையைத் தரும்.

கண் - கண்ணோட்டம்; கண்ணோட்டத்தினும் அருட்டன்மை யென்பது இரக்கவியல்பு மிக்கதாகலின், அதனை ‘மென்கண்' என வியந்தார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Apr-22, 5:37 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 30

மேலே