நல்லுலகம் சேராதவர் மூவர் – திரிகடுகம் 99

நேரிசை வெண்பா
(’ற்’ ‘ட்’ வல்லின எதுகை)

கற்றாரைக் கைவிட்டு வாழ்தலும் காமுற்ற
பெட்டாங்கு செய்தொழுகும் பேதையும் - முட்டின்றி
அல்லவை செய்யும் அலவலையும் இம்மூவர்
நல்லுலகம் சேரா தவர் 99

திரிகடுகம்

பொருளுரை:

கற்றறிவுடையாரை முற்றும் நீக்கிவிட்டு வாழ்பவனும்; தான் விரும்பியவற்றை விரும்பினாற் போலச் செய்து நடக்கும் அறிவில்லாதவனும்; தடையில்லாமல் தீங்குகளைச் செய்யும் பேச்சுக்காரனும் ஆகிய இம் மூவரும் நல்ல உலகங்களைச் சேராதவராவார்.

கருத்துரை:

கற்றவரைக் கைவிட்டிருப்பதும், வேண்டியவற்றை ஆராயாமல் செய்யத் துணிதலும், தீங்குகளைச் செய்து அவற்றைப் பற்றிப் பேசுதலும் நல்ல உலகம் சேரக் காரணமாக மாட்டாது.

வாழ்தல் என்பது வாழ்வானுடைய தற்கிழமையாகி நிற்றலால் சேராதவர் என்ற குறிப்பால் அவ்வாழ்வோனை உணர்த்தியது;

பெட்டாங்கு - பெட்ட ஆங்கு.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (28-Apr-22, 9:01 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 29

மேலே