பயணம் தரும் பேரின்பம்

ஆழ்கடல் நீந்தும் மீன்களும்
அடர்ந்த காட்டின் மான்களும்
ஆகாய நீட்சியின்
அழகை அறியாது !

ஒளியின் நூல் பிடித்ததன்
பிறப்பிடம் கண்டிடும்
மீன்கள் !

எல்லைக்கேத் துள்ளி ஓடி
வானம் பார்த்திடும்
மான்கள் !

கூட்டைப் பிரிந்து வராமல்
பறவை,
சிறகை விரிக்கப் பழகாது !

உயரப் பறக்கும் கழுகு
தரை வராமல்,
காளை திமிலேரும்
கர்வம் தரும்
களிப்பு பெறாது !

மனிதா,
வெற்றிக் கனியை
முழுசாய் சுவைக்க
அதைக் கையிலேந்திப்
பறிக்கத் தான் வேண்டும்
அதுவாய் விழுந்தால்
மண்ணாகித்தான் போகும் !

சிகரம் தொடுவதல்ல
இன்பம்,
அதைத் தொட
தொடரும் பயணம் தான்
பேரின்பம் !
முயன்றிடு, உழைத்திடு
வெற்றியோ தோல்வியோ 
அப்பேரின்பம் நிச்சயம் !

- நா முரளிதரன்

எழுதியவர் : நா முரளிதரன் (10-May-22, 9:26 pm)
சேர்த்தது : நா முரளிதரன்
பார்வை : 141

மேலே