வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர் – நான்மணிக்கடிகை 97

இன்னிசை வெண்பா

வாலிழையார் முன்னர் வனப்பிலார் பாடிலர்;
சாலும் அவைப்படிற் கல்லாதான் பாடிலன்!
கற்றான் ஒருவனும் பாடிலனே கல்லாதார்
பேதையார் முன்னர்ப் படின் 97

- நான்மணிக்கடிகை

பொருளுரை:

ஒள்ளிய நகைகளை யணிந்த அழகிய பெண்மக்களுக்கு முன் அழகில்லாத ஆடவர் பெருமை இலர்;

கல்வி கேள்விகளான் நிறைந்த அவையிற் புகுந்தால் கல்வியறிவில்லாதவன் பெருமையில்லாதவன்
ஆவான்;

கற்றறிவுடையான் ஒருவனும் படியாதவருடன் சேர்ந்தாலும், அறிவிலார்பாற் சேரினும் அறிஞன் பெருமையிலனே ஆவன்.

கருத்து:

அழகிய பெண்டிர்க்கு முன்னர் அழகில்லாத ஆடவர் பெருமை அடைதலில்லை;

கற்றார் அவையிற் கல்லாதான் பெருமை அடைதலில்லை;

கல்லாதார் முன்பு கற்றானும் பெருமையடைதல் இல்லை; அறிவிலார் முன்பும் அறிஞர் பெருமையடைதல் இல்லை.

விளக்கவுரை:

வாலிழையார் என்னுங் குறிப்பினால் வனப்பிலார் ஆடவராயினார்.

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-May-22, 7:52 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 28

சிறந்த கட்டுரைகள்

மேலே