கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு ஞால மறிந்த புகழ் – ஏலாதி 26
நேரிசை வெண்பா
மாண்டமைந்தா ராய்ந்த மதிவனப்பே வன்கண்மை
ஆண்டமைந்த கல்வியே சொல்லாற்றல் - பூண்டமைந்த
கால மறிதல் கருதுங்காற் றூதுவர்க்கு
ஞால மறிந்த புகழ் 26
- ஏலாதி
பொருளுரை:
ஒழுக்கத்தில் மாட்சிமைப்பட்டு பல நூல்களை ஆராயப்பெற்ற அறிவும், தோற்றப் பொலிவும், பகைவர்க்கு அஞ்சாமையும், பயின்று நிரம்பிய கல்வியறிவும், மாற்றாரையும் வழிப்படுத்துஞ் சொல்வன்மையும் தகுதி பொருந்திய காலமறிதலும் ஆராயுமிடத்து தூதர்களுக்கு உலகறிந்த புகழை விளைப்பனவாம்.
பொழிப்புரை:
மாட்சிமைப் பட்டமைந்து ஆராய்ந்த மதியுடைமையும், தோற்றப் பொலிவுண்டாதலும், தறுகண்மையும், தன்னால் ஆளப்பட்டமைந்த கல்வியுடைமையும், சொல்வன்மையும், பொருந்தியமைந்த காலமறிதலும் எனவிவை ஆராயுங்கால் தூதுவர்க்கு உலகறிந்த புகழாகும்.
கருத்து:
அறிவு அழகு முதலியன தூதுவர்க்கு இயல்பாவனவாம்.
தூதர் இருவகையர்: தாம் வகுத்துச் சொல்வோர், பிறர் சொல்லியதைச் சொல்லுவோர்.
ஞாலம், உயர்ந்தார் மேனின்றது