தானஞ் செய்வார்க்கு வானம் வழி திறக்கும் – அறநெறிச்சாரம் 180
நேரிசை வெண்பா
ஒன்றாக நல்ல(து) உயிரோம்பல் ஆங்கதன்பின்
நன்றாய்த் தடங்கினார்க் கீத்துண்டல் - என்றிரண்டும்
குன்றாப் புகழோன் வருகென்று மேலுலகம்
நின்றது வாயில் திறந்து 180
- அறநெறிச்சாரம்
பொருளுரை:
அறங்களுள் தன்னோடொப்ப தின்றித் தானாகச் சிறந்து உயர்ந்தது பிறவுயிர்களைப் பாதுகாத்தல், அதனையடுத்து ஞானநூல்களை ஆராய்ந்து மனம் பொறி வழி போகாது அடங்கினார்க்கு உண்டி முதலியன உதவித் தாமும் உண்ணுதல் இவ்விரு செயல்களாலும் நிறைந்த கீர்த்தி யடைந்தவனை வருக என்று கூறித் தனது வாயிலைத் திறந்து அவன் வருகையை எதிர்நோக்கி மேலுலகம் நிற்கின்றது.