554 கரைதாங்க லின்றிமழை கடல்தந்தோன் கடவுள் – தெய்வத்தன்மையும் வாழ்த்தும் 12
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
நீரினைக் கலங்க ளின்றி
..நிறுத்தல்போ னீர்தி ரண்ட
காரினைக் கீழ்வி ழாது
..ககனத்தி னிறுவி நொய்ய
மாரியே பெய்யச் செய்து
..மறித்திடு கரையொன் றின்றி
வாரியை நிறுத்து மின்ப
..வாரியைச் சாராய் நெஞ்சே!.12
தெய்வத்தன்மையும் வாழ்த்தும், நீதி நூல்
மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
தண்ணீரை ஏனம் ஏதும் இன்றி வெறுவெளியில் நிறுத்துவதுபோல் நீர் நிறைந்த மேகத்தை ஒருமிக்கக் கீழ் விழாதபடி வானத்தில் நிறுத்திச் சிறு சிறு துளியாகப் பெய்யச் செய்வதும், ஆழ நீளம் அகலம் அளவிடப்படாத கடலைக் கரையின்றி எல்லை கடவாது நிற்கச் செய்வதும் ஆகிய பேராற்றல் வாய்ந்த பெரும் பொருள் பேரின்பக் கடலாகிய ஆண்டவனே.
மனமே! அந்த ஆண்டவனைச் `சார்தரும் நோய் சாராதிருத்தற் பொருட்டு அன்புடன் மறவா நினைவுடன் உறவாய்ச் சார்வாயாக.
கலம் - பாத்திரம். திரண்ட - நிறைந்த. ககனம் - வானம். நொய்ய - சிறிய. மாரி - மழை. வாரி - கடல்.