514 உயிரும் உணர்வும் விலங்கிற்கும் உண்டு - விலங்கினத்துக்கு இடர் செய்யாமை 1
அறுசீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்
விளம் மா தேமா அரையடிக்கு
(விளம் வருமிடத்தில் மாங்காய்ச்சீர் அருகி வரும்)
விலங்கினங் கட்கு வாக்கும்
..வினையுணர் ஞானத் தோடு
நலங்களு மிலையென் றாலும்
..நரரைப்போற் சீவன் மெய்யைம்
புலன்களும் இன்ப துன்பப்
..புணர்ப்பறி நெஞ்சி னோடுந்
துலங்கிடும் விலங்கை வாட்டித்
..துயர்செய்வோர் நரகத் தாழ்வார். 1
- விலங்கினத்துக்கு இடர் செய்யாமை, நீதிநூல்
- மாயூரம் வேதநாயகம் பிள்ளை பாடல்
பொருளுரை:
விலங்கு முதலிய சிற்றுயிர்கட்குத் தங் கருத்தை உணர்த்தும் மொழியும் நலம் பொலம் பகுத்துணரும் உணர்வும் ஏனை நன்மைகளும் மக்களைப்போல் இல்லை யென்றாலும், உயிரும் உடலும், மெய், வாய் கண் மூக்குச் செவி யென்னும் ஐம்புலன்களும் இன்ப துன்பம் உணரும் உள்ளமும் விளக்கமுற அமைந்துள்ளன.
அப்படிப்பட்ட விலங்கினங்களைத் துன்புறுத்தி வருத்துவோர் மீளா நரகத்து ஆழ்வர்.
வாக்கு - மொழி. நரர் - மக்கள்