கவிதை

கேன்டீனில் சுந்தரியோடு சிரித்துப் பேசிக்கொண்டிருந்த ரமேஷைப் பார்த்ததும்,
அழுதுகொண்டே கம்பெனி வாசலை விட்டு வெளியேறினாள், செல்வி.

செல்வி அழுதுகொண்டு போவதைப் பார்த்த அகிலன், அவளின் பின்னே ஓடி வந்தான்.

"செல்வி! செல்வி! நில்லு.

ஏன் இவ்ளோ வேகமா போற?

உன்கிட்ட ஒரு விஷயம்
சொல்லணும்" என்றபடி மூச்சிரைக்க ஓடி வந்தான், அகிலன். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்தான்.

"ஏன் யாருக்குமே என்ன பிடிக்க மாட்டேங்குது?"

"அப்டிலாம் சொல்லாத, உன்ன எல்லோருக்கும் புடிக்கும்.
நீ எதுக்கும் கவலப்படாத, நீ வேணா பாரு ஒருநாள் அவனாவே உன்ன தேடி வருவான்" என்று அவளை ஆசுவாசப் படுத்தினான்.

ஆறுதல் வார்த்தைகளுக்கு இடையே அவளது விரல்களை மெதுவாகப் பிடித்துக் கொண்டான். அவளும் எதைப் பற்றியும் யோசிக்காமலும் உதறி விட மனமில்லாமலும்
தன் உள்ளங்கை வியர்வையை அவனது உள்ளங்கையில் படரவிட்டாள்.

மௌனம் பேசிக்கொண்டு
இருவரும் விரல்களைக் கோத்தபடியே கம்பெனி பேருந்தில் ஏறினார்கள். வற்றிய கண்ணீரோடு அவன் தோளின் மேல் சாய்ந்துகிடந்தாள். பேருந்து சென்று கொண்டே இருந்தது.

திடீரென ஏதோ ஞாபகம் வந்தவளாய்
"ஆமா நீ ஏதோ ஒரு விஷயம் சொல்லணும்னு சொன்னியே , என்னனு சொல்லு" என்றாள், செல்வி.

ஆ… அது வந்து...
"ஒரு கவித எழுதி இருக்கேன் படிச்சி பாத்து, எப்டி இருக்குன்னு சொல்லு" என்று பாக்கெட்டில் மடித்து வைத்திருந்த பேப்பரை அவளிடம் நீட்டினான்..
அதில்

"எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்" என்று எழுதியிருந்தது.

அந்தக் காகிதத்தின் ஓரத்தில் "ஐ லவ் யூ" என்றும் எழுதப்பட்டிருந்தது.

படித்து முடித்த அவள் ஒன்றுமே சொல்லவில்லை. மௌனமாகவும் பதட்டமாகவும் இருந்தாள். எதுவும் பேசாமல் இருவரும் பேருந்தை விட்டு இறங்கி அவரவர் அறைக்குச் சென்றார்கள்.

அங்கும் இங்கும் அலைந்து கொண்டிருந்தான். ஏதேதோ தனக்குள்ளே பேசிக் கொண்டிருந்தான்.
வெட்கம் ஒரு பக்கம், அவள் என்ன சொல்வாளோ என்கிற பயம் ஒரு பக்கம் அகிலனை உருட்டிக் கொண்டிருந்தன.

ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில்
அவளின் பதிலுக்காக வாட்ஸ் அப்பை திறந்து வைத்தபடி தூங்காமல் காத்திருந்தான். சரியாக மணி 2:30 இருக்கும். ஒரு நோட்டிபிகேஷன் சத்தம் காதில் விழுந்தது. கண்களைக் கசக்கிக் கொண்டே தூக்கக் கிறக்கத்தில் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்தான் அகிலன்.

அதில்

"எல்லோருக்கும் காதல் பிடித்திருக்கிறது
ஆனால், காதலுக்கு ஒரு சிலரை மட்டுமே பிடித்திருக்கிறது இப்போதைக்கு நீயும் நானும்"

பாவம் அகிலன்… சந்தோசம் வெகு நேரம் நீடிக்கவில்லை.

மகிழ்ச்சியின் வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்த அகிலனின் கனவில் நீர் வாரி இறைத்து விட்டது செல்போன் அலாரம்.

கனவைக் கலைத்த செல்போனைத் திட்டிக்கொண்டே அவசர அவசரமாய்க் கம்பெனிக்குக் கிளம்பினான்.

கேன்டீனில் டீ ஆர்டர் செய்துவிட்டு எதார்த்தமாகத் திரும்பிப் பார்த்தான். கனவுக்கு மாறாகச் செல்வியும் ரமேஷும் சிரித்துச் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அவனுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. "டீ"யைக் குப்பைத் தொட்டியில் வீசி விட்டு,
கடைசி டேபிளில் சோகமாய் அமர்ந்திருந்த சுந்தரியிடம் கடிதத்தை நீட்டினான்.

எழுதியவர் : திசை சங்கர் (1-Feb-23, 11:40 am)
சேர்த்தது : THISAI SANKAR
Tanglish : kavithai
பார்வை : 233

மேலே