புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும் - பழமொழி நானூறு 282
நேரிசை வெண்பா
உடையதனைக் காப்பான் உடையான் அதுவே
உடையானைக் காப்பதூஉ மாகும் - அடையின்
புதற்குப் புலியும் வலியே புலிக்குப்
புதலும் வலியாய் விடும். 282 - பழமொழி நானூறு
பொருளுரை:
சென்றடையுமாகில் காட்டிற்கு புலியும் பாதுகாவலாம்; புலிக்கு காடும் பாதுகாவலாய் நிற்கும்.
அதுபோல, தன்னிடத்திலுள்ள பொருளை இடையூறுபடாது காப்பாற்றுகின்றவனே பொருளுடையவன் எனப்படுவான்; அப்பொருள் தானே தன்னையுடையானை இடையூறு உறாமற் காப்பாற்றுகின்றதாகும்.
கருத்து:
பொருளை ஒருவன் காப்பாற்றினால் அவனைப் பொருள் காப்பாற்றும்.
விளக்கம்:
வலி என்பது இருவழியும் வலிமைக்கு ஏதுவாகிய பாதுகாவல் என்னும் பொருளைப் பயந்து நின்றது. புதல் என்பது ஈரிடத்தும் புதல்கள் நெருங்கியுள்ள காடு எனக் காட்டின் மேல் நின்றது.
புதல் - புல்பூண்டுகள்.
'புதற்குப் புலியும் வலியே புலிக்குப் புதலும் வலியாய் விடும்' என்பது பழமொழி.