மணமக்களுக்கு எனது சீர்வரிசைகள்

பௌர்ணமி நிலவின் நகலெடுத்து நித்தம்
விண்மீனின் ஒளிப்புகுத்தி சிறு
விளக்குகளால் தோரணம் அமைத்தேன்
மண மேடையை அலங்கரிக்க...!
மார்கழி பனியை அள்ளிக்கோர்த்து மாதுளை
கனிப்போல் ஒரு பாசி செய்தேன்...!
அட,அதனழகை கண்டு தங்கமும் தள்ளி நிற்க
குமலியின் சங்கு கழுத்தில் தாவி
குதிக்க..! அடர்ந்த மாமலையில் மறைவாய் பூத்த
குறிஞ்சி மலர் பறித்து, மழையில்
வெடித்த மின்னல் கீற்றில் நாரெடுத்து நான்
கட்டினேன் ஒரு மண மாலை..!
அந்த சுப முகுர்த்தத்தில் உங்கள் தோளில்
மாலை தவழ்ந்திட, ஏக்கத்தில்
வாடுகிறது கரிசக்காட்டு பூஞ்சோலை ..!
வெண் மேகத்தை எட்டுக்கு
நான்காய் வெட்டி எடுத்து , அந்தி வெயில்
பட்டு வெடித்த பருத்தி
பஞ்சால் அதை நிரப்பி நான் செய்தேனொரு
மெத்தையை ...! நித்தமதில்
நீங்கள் இனிதே உறங்க, பாருங்கள் வானத்து
பால் நிலா பாதைதேடி
தவிக்கும் வித்தையை ...! மணமக்களே
இவையாவும் இயற்க்கை
தந்த சீர்வரிசைகள், இலக்கியத்தில் கம்பன்
சொல்லா எண் சீர் விருத்தங்கள்..
புன்னகையோடு என்றும் புது மலராய்
உங்கள் இல்லறம்
செழிக்க எனது வாழ்த்துக்கள்..!

எழுதியவர் : dhamu (9-Feb-12, 1:18 pm)
சேர்த்தது : தாமோதரன்
பார்வை : 553

மேலே