[88 ] தரிசனத் திட்டங்கள் தெருவிலே..!

வரிசையாய் வேலைக் கான
வழிவகை செய்து, வாழ்க்கைப்
பரிசென அரிசி ஈந்து,
பருப்புகள் எண்ணேய் 'ரேஷன்'
வரிசையில் கிடைக்கச் செய்து,
வளம்பட அடுப்பும் பொங்க
எரிதிரவ வாயு தந்தால்
ஏனிவர் கணவர் எல்லாம்..

அரசியல் அதிகம் பேசி
அரட்டையில் நாளைப் போக்கி,
வரிசையில் 'டாஸ்மார்க்' பானம்
வாங்கியே குடித்து விட்டுத்
திரிசங்கு சொர்க்கம் தேடித் ,
தெருவிலே கிடப்பார்? எங்கள்
தரிசனத் திட்ட மெல்லாம்
தரிசெனக் கிடக்கு தையோ!

கனவுகள் கண்ணில் தேக்கிக்,
கனத்த'பை' முதுகில் தூக்கி
மனத்திலே கல்வி யூக்கி
மழலைகள் பள்ளி சென்றால்
தினமொரு நியாயம் கேட்டுத்
தெருவிலே நிற்கும் வண்ணம்
மனமிலா அரசோ நாளும்
மாற்றுதே படத் திட்டம்!

காரியம் ஆற்றும் கைகள்
கடைச்சரக்கு எடுத்து நிற்கும்!
கூரிய அறிவை வேண்டும்
குழந்தைகள் கொடிப்பி திக்கும்!
சீரியத் திட்ட மெல்லாம்
சிதறியப் பாலாய் ஓடும்!
யாரினித் தமிழர் வாழ்வை
எப்படி உயர்த்தப் போமோ?
-௦-

எழுதியவர் : எசேக்கியல் காளியப்பன் (21-Feb-12, 5:32 pm)
பார்வை : 341

மேலே