அழிவை நோக்கிய பாதையில் தமிழ்மொழி பயணிக்கிறது !....

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத்தமிழ் என்று சங்கே முழங்கு என்று பல்லாயிரம் ஆண்டுக்கு மேலாக வீர முழக்கம் இட்ட ஒரு இனம் தனது தொன்மை வாய்ந்த இலக்கண இலக்கிய மரபுகளை தன்னகத்தே கொண்டுள்ள கலப்புக்கள் அற்ற தூய மொழியாக பல்லாயிரம் கல்வெட்டுக்களை வரலாற்று சான்றுகளாக பறைசாற்றி மங்காத புகழோடு வானுயர்ந்து வளர்ந்து சிறந்து விளங்குகின்ற தனது தாய்மொழியாகிய தமிழ் மொழியை இழக்கப்போகிறதே என்பதுதான் தமிழ் ஆர்வலர்களின் இன்றைய கவலை.

மொழி ஆய்வாளர்களின் கருத்து

உலகில் பெரும்பாலன மொழிகள் தனது இறுதிக்காலத்தை நெருக்குகின்றன என்பதுதான் மொழியியல் வல்லுனர்களின் எச்சரிக்கை. இன்றைக்கு உலகிலே வாழ்கின்ற எழுநூறு கோடி மக்களும் மொத்தம் ஏழாயிரம் மொழிகளையும் பேசுகின்றார்கள். இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்த ஏழாயிரம் மொழிகளில் அறுநூறு மொழிகள் மாத்திரமே எஞ்சியிருக்கும் என்று கூறப்படுகின்றது. ஏனெனில் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை உலகின் ஏதோ ஒரு மூலையில் ஒரு மொழி அழிகிறது என்பது மொழியியல் ஆய்வாளர்களின் கூற்று. இன்றைக்கு பேசப்படுகின்ற ஏழாயிரம் மொழிகளில் மூவாயிரம் மொழிகளை ஆயிரத்திற்கும் குறைவானவர்களே பேசுகிறார்கள். ஐந்து மொழிகளை வெறும் பத்து பேர் மட்டுமே பேசுகிறார்கள். மேலும் ஒடுக்குமுறைக்கு உள்ளான ஒரு இனத்தினுடைய அல்லது பழங்குடி மக்களின் மொழிகளே அதிக அளவில் அழிவடைவதாக மற்றொரு தகவல் கூறுகின்றது.

தமிழ் மொழியின் போக்கு

உலகெங்கும் வியாபித்துள்ள ஆறரைக் கோடிக்கும் மேற்பட்ட தமிழர்களை உள்ளடக்கி உலகில் அதிகமான மக்களால் பேசப்படுகின்ற இருபது மொழிகளின் பட்டியலில் பத்தொன்பதாவது இடத்தில் உள்ள தமிழ் மொழி இன்னும் ஐம்பது ஆண்டுகளில் அழியப்போகிறது என்பதறியாது இன்னும் எம்மில் பலர் வாழ்கிறார்களே என்பதுதான் மிக வருத்தமான செய்தி. ஒரு மொழி அழிவடையத் தேவையான அடிப்படைக் காரணிகளை தமிழ் மொழியும் பெற்றுவிட்டது என்பது ஆய்வாளர்களின் கருத்து.

 மொழி, இன ரீதியான ஒடுக்குமுறைகள்

 அந்நிய மொழிகளின் ஊடுருவல்

 வட்டார பேச்சு வழக்குகள்

 அந்நிய நாகரிக வளர்ச்சி மோகங்கள்

போன்றன ஒரு மொழியின் அழிவில் செல்வாக்குச் செலுத்துகின்றன. அன்னிய மொழியின் ஆக்கிரமிப்புக்கள் தமிழில் ஆழமாக ஊடுருவி அழித்து கொண்டிருக்கின்றன. சான்றாக தமிழ் மொழியா அல்லது பிற மொழியா என்று எமக்கு தெரியாத அளவிற்கு அன்னிய மொழிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. அன்னிய மொழிகள் தமிழில் இன்று நேற்று ஊடுருவியவை அல்ல. ஆதி முதல் ஆக்கிரமிக்கப்பட்டவை. குறிப்பாக வடமொழி, அதுவும் ஊடுருவியது என்று சொல்லமல் ஆக்கிரமிக்கப்பட்டது என்று சொல்வது சாலப் பொருந்தும்.

இவர்கள் மதத்தை வளர்ப்பதோடு நின்று விடாது வடமொழியையும் வளர்த்தனர். தமிழ் மொழியை அழித்தனர். தமிழ் ஒலைச்சுவடிகளை ஆடிப்பெருக்கன்று ஆற்றிலும் கார்த்திகை தீபத்தன்று நெருப்பிலும் இடுவது புண்ணியம் என்று கூறி பல்லாயிரம் சுவடிகளை அழித்தனர். இவ்வாறு இவர்களின் அநியாயங்கள் தொடர்ந்து கொண்டிருக்க அக்காலத்தில் தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் முதலானோர் வடமொழிச் சொற்களை தமிழில் உச்சரிக்க வேண்டும் என்று இலக்கணம் வகுத்தனர்.‌

இவ்வாறு வடமொழியால் பெரிதும் பாதிக்கப்பட்ட தமிழ் மொழியானது போர்த்துகேயர், ஒல்லாந்தர், ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பின் போது மீண்டும் அந்நிய மொழி ஊடுருவலுக்கு உள்ளானது. ஆங்கில மொழியின் ஆதிக்கமானது எல்லா மொழிகளையும் போல் தமிழ் மொழியிலும் மிதமிஞ்சி கிடக்கிறது. இன்றைய நாகரிக வளர்ச்சியும் மேற்கத்தேய மோகமும் இளந்தலைமுறையினரை ஆங்கிலத்தின் பக்கம் ஈர்க்கிறது. ஒருவனின் ஆங்கிலப் புலமையே அவனது அறிவுத்திறமையாக கணக்கிடப்படுகின்றது. தனியார் கற்கை நெறிகள், உயர் கல்விகள், பட்டப்படிப்புக்கள் அனைத்தும் ஆங்கில மொழியிலேயே நடைபெறுகின்றன. தமிழன் தன் பெருமையை மறந்து ஆங்கில மொழியை பேசுகிறான். ஆங்கிலம் கலந்த தமிழ் பேசாதவர்கள் நாகரிகம் அற்றவர்கள் என்று கருதும் காலகட்டத்தில் நாம் வாழுகின்றோம் என்று ஒரு கவிஞன் கவலையோடு பாடினான்;

தமிழன் தாய் பெயரோ மம்மி

அவன் நாய் பெயரோ யிம்மி

வருந்தி நான் அழுகிறேனே விம்மி விம்மி...

வட்டார மொழிகளின் வழக்கு புதிய மொழித் தோன்றல்களை உருவாக்கக்கூடியவை. வெவ்வேறு பிரதேசங்களில் வாழும் தமிழர்கள் வேறுபட்ட சொல் வழக்குகளை கொண்டிருக்கின்றனர். இவர்கள் வட்டார இலக்கணங்களை தோற்றுவிக்க நேர்ந்தால் அது புதிய மொழித் தோன்றலுக்கு இட்டுச் செல்லும். மேலும் நகர்புறங்களில் வாழ்பவர்கள் ஆங்கில மொழியினதும் அல்லது புலம் பெயர்ந்து வாழ்கின்ற தமிழர்கள் தத்தமது பிரதேச பெரும்பான்மை மொழியினதும் ஆதிக்கத்தால் காலப்போக்கில் தமிழின் தனித்துவத்தை இழக்கின்ற பரிதாப நிலை ஏற்படலாம்.

தமிழ் மொழி அழிகிறது ஒழிகிறது என்று எப்படித்தான் கத்தினாலும் கதறினாலும் எம்மில் சிலர் இதனை ஒரு பொருட்டாக கருதுவதில்லை. மொழி என்பது தொடர்பாடலை ஏற்படுத்துகின்ற ஒரு சாதனம் என ஒரே வரியில் முடித்து கொள்வார்கள்.

ஆதி மனிதன் எவ்வாறு படிப்படியாக பல பரிணாம வளர்ச்சிகளை கண்டு உயர்ந்து நிற்கின்றானோ அதே போல் சைகை மூலமாக தொடங்கி பேச்சு ரூபம் பெற்று எழுத்துருவம் கண்டு இலக்கண இலக்கியம் படைத்து, பண்பாடு கலாச்சாரத்தோடு பின்னி பிணைந்து உருவாக்கியதே மொழியாகும். ஒரு மொழியின் அழிவு என்பது ஒரு இனத்தின் அழிவை போன்றதாகும். ஆறரைக் கோடி பேர் இருக்கிறோமே பிறகெப்படி தமிழ் அழிந்துவிடும் என சனத்தொகையை காரணங்காட்டி நாம் நீண்ட காலத்திற்கு இறுமாப்போடு இருந்துவிட முடியாது. தமிழ் அழிவதற்கான சகல காரணிகளும் ஏற்கனவே தோற்றம் பெற்றுவிட்டன. ஆகவே தமிழையும் தமிழனையும் காப்பாற்ற வேண்டிய கடமை ஒவ்வொரு தமிழனின் கைகளிலும்தான்...



செ.சத்யா செந்தில், தமிழ் முதலாம் ஆண்டு. மைலம் தமிழ் கல்லூரி, விழுப்புரம் மாவட்டம், தமிழ்நாடு - இந்தியா.

எழுதியவர் : செ.சத்யா செந்தில், (29-Feb-12, 11:11 am)
பார்வை : 684

மேலே