செப்டம்பர் பதினொன்று

மனங்கள் மாறிட்டு மதங்கள் மறைந்திட்டால்
மண்ணில் மாந்தர் மாள்வது குறையுமன்றோ !
புவிதன்னில் புழங்கிடும் தீச்சொல் தீவிரவாதம்
புதைகுழியில் விழுந்தால் இதயம் குளிருமன்றோ !
வீழ்ந்தன விண்ணைத் தொட்ட கோபுரங்கள்
வீழ்த்தின வீணர்களின் வீறிட்ட விமானங்கள் !

சரசரவென சரிந்தது அடுக்குமாடி கட்டிடமல்ல
ஒட்டையுள்ள ஒற்றுமையில் ஒட்டியிருந்த நம்பிக்கை !
அழிந்தது அழகுமிகு அமெரிக்க ஆபரணமல்ல
அசைந்தது அகிலத்து அமைதியின் அடித்தளம் !
மறைந்தது மங்காபுகழ் மாளிகை மட்டுமல்ல
உறைந்தது உலகத்து உள்ளங்களின் உயிர்மூச்சு !

திசையெங்கும் தீயெனப் பரவிடும் தீவிரவாதம்
ஓசையின்றி ஒழிந்திட ஒன்றிடுவோம் இன்றே !
தலைமுறை தழைத்திட வழிவகை கண்டிட
அமைதி நிலைத்திட அடிக்கல் நாட்டிடுவோம் !
வருங்கால சந்ததிகள் வளமோடு வாழ்ந்திட
மதங்கள் இல்லா மாந்தராய் மாறிடுவோம் !

வையகத்தில் வளர்ந்திட்ட வன்முறை வித்துக்கள்
அடியோடு அழிந்திட வழிகள் வகுத்திடுவோம்
மனமாற்றம் மதமாற்றம் தடமாற்றம் உருமாற்றம்
எம்மாற்றமும் எழாவிடில் ஏமாற்றமே நிகழாது !
இனவெறி மதவெறி மறைந்திட்டால் இவ்வுலகில்
இன்பமாய் என்றும் இறுதிவரை வாழ்ந்திடலாம் !

எழுதியவர் : பழனிகுமார் (11-Aug-12, 9:35 pm)
சேர்த்தது : பழனி குமார்
பார்வை : 192

மேலே