மேலும் சில சிறகுகள்....

நீங்கள் அழைக்கிறீர்கள்!
என் பெயர் தொலைந்துவிட்டதால்
திரும்பிப் பார்க்கவில்லை.
*****************************************************
உயிரோடு திரிகிறேன்
நிகழும் மரணங்களில்
நீந்தியபடி.
******************************************************
வற்றிக் கிடக்கிறது....
என்றாலும்
நதி என்றுதான் பெயர்.
*******************************************************
எளிமையான சிறகாய்
பறந்து செல்கிறது காலம்.
வலுவான காயங்களுடன்...
இடறி...இடறி...
நடக்கிறோம் நாம்.
*******************************************************
கூடு திரும்பியும்...
பறவையின் கண்களில்
உறைந்திருக்கிறது
வலை விரித்திருந்த
வேடனின் பார்வை.
********************************************************
ஈரம் நிறைந்த மழை
பெய்து கொண்டிருக்கிறது
ஒதுங்க இடமற்றவனின்
உடலெங்கும்.
********************************************************
அந்தி மழையில்.....
நான் அருந்தும் தேநீர்க் கோப்பையில்
பிடித்து வைத்திருக்கிறேன்...
வந்து மறையும்
வானவில்லின் நிழலை...
உங்களுக்காகவும்.
**********************************************************
நதியில்...
மூழ்கி எழுகிறேன்...
என்னை நீந்திக் கடந்திருந்தது

நான் மூழ்குகையில்...
என்னை விழுங்கியிருந்த நதி.
***********************************************************

எழுதியவர் : rameshalam (27-Aug-12, 3:55 pm)
பார்வை : 1207

மேலே