மனமே ! மனமே காரணம்
ஒன்றே மனம்
பலவகைக் குணம்......
தடுமாறும் முடிவுகள்
குழம்பும் நிலை - இது
உறுதியற்ற மனம் !
நினைத்துப் பார்க்காத
தேவையற்ற இழப்புகள் - இது
அடம்பிடிக்கும் மனம் !
தன் பலம் அறியாது
தனக்காய் வாழாது - இது
அச்சமுறும் மனம் !
பதுங்கியே இருக்கும்
பல் வகையாய் நடிக்கும் - இது
குற்றமுள்ள மனம் !
செய்வதெல்லாம் சரி
தன் புத்தி கேட்காது - இது
பக்குவமற்ற மனம் !
எதிர்நீச்சல் போடும்
சோர்வின்றி உழைக்கும் - இது
திடமான மனம் !
எல்லாம் அதிர்ஷ்டமே
எதுவும் எளிமையல்ல - இது
பொறுப்பற்ற மனம் !
நன்மைகளே நடக்கும்
பொறுமையே பொன் - இது
அமைதியான மனம் !
தன்னையும் நேசிக்கும்
பிறரையும் நேசிக்கும் - இது
அன்பு மனம் !
அளவில்லா திட்டங்கள்
அடைந்தே தீரும் - இது
ஆசை மனம் !
நோயின்றி மெலியும்
நிம்மதியற்றுப் போகும் - இது
பொறாமை மனம் !
இளமையோ நீங்காது
வயதும் கூடியது - இது
குழந்தை மனம் !
களைப்பு என்பதோ
கட்டவிழ்ந்து போகும் - இது
புத்துணர்ச்சி மனம் !
கலக்கங்கள் கல்லாகும்
சிந்தனையும் சிறப்பாகும் - இது
தனித்தன்மை மனம் !
மரணம் சுமக்கும்
தோள்களிலே சுகமாய் - இது
வீரமான மனம் !
மனமே ஒப்பற்ற
வரமாகும்
தூக்கிவிடும் உண்மைக்
கரமாகும்......
மனம் ஒருமித்தால்
மார்க்கம் உண்டு
மானுடமே உனக்கொரு
அர்த்தமும் உண்டு.....