என்னுயிர் என்றும் அவள்தானே !

மாலை ஐந்து மணியானதும் அன்றைய வேலை முடிந்து விட்டதென்ற ஆனந்தத்தில் விரைவாக அலுவலகத்தில் இருந்து தனது வீட்டிற்கு கிளம்பினாள் சாருமதி.சாருமதி "பி. காம்" படித்து முடித்து விட்டு அவளின் வீட்டிற்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய கம்பனியில் அசிஸ்டன்ட் அக்கௌன்டன்ட் ஆக வேலை பார்த்து வருகின்றாள்.சாருமதி வேலை செய்து தான் பிழைக்க வேண்டிய நிலையில் இல்லை. அவளுக்கு ஒரே ஒரு அக்கா மட்டும் தான். அவளும் திருமணமாகி அமெரிக்காவில் வசிக்கின்றாள்.. அவளது தந்தை அவளது ஊரில் உள்ள பணக்காரர்களில் ஒருவர். தனது பொழுது போக்கிற்காக மட்டும்தான் அவள் வேலை செய்து வருகின்றாள்.

வீடு சென்ற சாருவுக்கு எப்போது மாலை ஏழு மணி ஆகும் என்று இருந்தது.அடிக்கடி கடிகாரத்தை நோட்டம் விட்டு கொண்டு இருந்தாள் அவள். ஏனென்றால் அவளுக்கு பிடித்த கவிஞன் கார்முகிலனின் பேட்டி நேரடியாக ஒளிபரப்பாகும் என்று நேற்றே அறிவித்து இருந்தார்கள்.மாலை ஆறு ஐம்பத்தைந்து ஆனதும் தொலைக்காட்சின் முன்னர் அமர்ந்து கொண்டாள் அவள்.முதல் முதலில் அவனை நேரடியாக தொலைகாட்சியில் பார்க்க போகின்றாள். சாதாரணமாக அவனது கவிதை புத்தகங்கள் எங்கு கிடைத்தாலும் உடனடியாக வாங்கி விடுவாள். அவள் அவனது புத்தகங்களை வாங்குவதற்கு ஒருபோதும் கணக்கு பார்ப்பதே இல்லை . சில சமங்களில் மாதத்திற்கு ஐயாயிரம் ரூபா வரைக்கும் கூட அவனது புத்தகங்களை வாங்கி விடுவாள்.


அவளது அம்மா கூட அடிக்கடி அவளுடன் கோபித்து கொள்வார்.
"ஏன்டி சாரு என்ன உனக்கு பைத்தியமா பிடித்து இருக்கின்றது?, பாடப்புத்தகங்களுக்கு செலவழிக்க வேண்டிய பணத்தை எதற்காக கவிதை புத்தகங்களுக்கு செலவளிக்கின்றாய்?" என்று கடிந்து கொள்வார்.அவள் யார் சொல்வதையும் ஒருபோதும் காதில் வாங்கி கொள்ளவே மாட்டாள். அவளையும் அறியாமல் அவனது புத்தகங்களில் ஒரு விருப்பம்.ஏன் அவனிலும் கூடத்தான்.

நேரடி ஒலிபரப்பு தொடங்கியதும் அவனை பற்றிய தனிப்பட கேள்விகளுக்கு பதில் அளித்த அவன், "விரும்பும் நேயர்கள் தன்னுடன் தொலைபேசி மூலமாக தொடர்பு கொள்ளலாம்" என்று தெரிவித்தான். அதுவரை அமைதியாக கேட்டு கொண்டு இருந்த சாரு, சடாரென அருகில் இருந்த அவளது வீட்டு டெலிபோனில் இருந்து தொலைக்காட்சி அலுவலகத்துடன் தொடர்பு கொண்டாள். மிகுந்த முயற்சியின் பின்னர் அவனுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது அவளுக்கு.

"ஹலோ சார் நான் சாருமதி பேசுறேன்" என்றாள் அவள்.
"சொல்லுங்கள் சாருமதி, நான் கார்முகிலன் பேசுகின்றேன்" என்றான் அவன்
"சார் உங்களுடன் பேசுவேன் என்று ஒருபோதும் நினைத்து பார்க்கவே இல்லை",
உங்கள் கவிதைகள் என்றால் எனக்கு உயிர் சார்., அதுவும் நீங்கள் எழுதிய
"ஏன் பெண்ணே நீ சிரிக்கும் அழகை
காணத்தானா அந்த பூக்கள்
எல்லாம் காலையிலே பூத்திருந்து
உனக்காக காத்திருக்கின்றன" என்ற கவிதை எனக்கு ரொம்ப பிடிக்கும் சார் .
மற்றையது சார்
"என் பிரமச்சாரியம் தொலைந்து போனதே பெண்ணே உன் ஒரு விழியின் கடை பார்வையிலே" மிகவும் பிடித்த கவிதைகள் என்றாள் அவள் .

"ரொம்ப நன்றி சாருமதி நீங்க வேற ஏதாவது ஏன் எழுத்தை பற்றி சொல்ல விரும்புகின்றீர்க"ளா? என்றான் அவன்.
"ஆமாம் சார்! உங்களை நேரில் பார்த்து பேச ரொம்ப ஆசையாக இருக்கின்றது " என்றாள் அவள்.
"ஓ அப்படியா ? சரி வருகின்ற சனிக்கிழமை எனது புத்தக கண்காட்சி வவுனியா நூலகத்தில் உள்ளது வாருங்கள்" என்றான் அவன்.
"சரி நிச்சயமாக வருகின்றேன்" என்றாள் அவள் சனிக்கிழமை அதிகாலையிலேயே எழுந்த சாரு தலைக்கு ஷாம்பு போட்டு நன்றாக தலைக்கு குளித்து கொண்டாள்.

அவளுக்கு பிடித்த ஆரஞ்சும் மரூன் ரெட்டும் கலந்த சுரிதாரை அணிந்து கொண்ட அவள் தனது சுருண்ட நீள கூந்தலை பின்னோக்கி வாரி ஒரு பின்னாடி அழகான கிளிப் மாட்டிகொண்டாள். முகத்தில் லேசாக பவுடரும் பவுடேசனும் போட்டு கொண்ட அவள் கண்ணிற்கு அழகாக மை இட்டுக்கொண்டாள். கருத்த பொட்டை எடுத்து நெற்றியில் ஒட்டி கொண்ட அவள் ஒரு ஆரஞ்சு வண்ண கிறிஸ்டல் மாலையை தனது கழுத்தில் மாட்டி கொண்டாள். மாரூன் ரெட் பேள் வளையலை ஒரு கையிலும் கருத்த அகண்ட பார் உள்ள மணிக்கூட்டை மறு கையிலும் அணிந்துகொண்ட அவள் தன் முன்னே இருந்த கண்ணாடியில் பார்த்ததும் பிரமித்து நின்றாள். அவளால் அவளது கண்களையே நம்ப முடியவில்லை. அவ்வளவு அழகாக தோன்றினாள்.தன் தோற்றத்தில் திருப்தி பட்டு கொண்ட சாரு தனது ஸ்கூட்டியை எடுத்து கொண்டு வவுனியா நூலகத்தை நோக்கி விரைந்து சென்றாள்.

அவளுக்கு அவளை புரிந்து கொள்ளவே முடியவில்லை. எதற்காக இந்த ஆனந்தம் என்றும் புரியவில்லை. கார்முகிலனின் கவிதையை நேசிக்கும் அவள், அவனையும் நேசிக்கின்றாளா ? என்பதில் அவளுக்கு மிகுந்த குழப்பம் இருந்தது. இன்று நேரடியாக அவனுடன் பேசும் போது தன் உணர்வுகளை சொல்லி கொள்ள வேண்டும் என்று எண்ணி கொண்டாள் அவள். அதனால் தான் விழா தொடங்குவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னரே அவள் அங்கு சென்றிருந்தாள்.

நூலகத்தில் நுழைந்த அவள் அவனை சந்திப்பதற்காக அவன் தங்கி இருந்த அறையை நோக்கி நடந்தாள். அவன் தங்கி இருந்த அறையின் கதவு மூடி இருந்தது. "டொக், டொக்" என தட்டி விட்டு அவனின் அனுமதிக்காக காத்திருந்தாள் அவள்.அவளது மனது பட படவென அடித்துக் கொண்டது.

"உள்ளே வரலாம்" என்ற அவனின் குரலில் உள்ளே சென்றாள் அவள். எதிரே கிடந்த மேசையின் பின்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்திருந்தான் அவன். நேரடியாக பார்த்த அவளுக்கு அவனிடம் பேசுவதற்கு மிகவும் தயக்கமாக இருந்தது.

"ஹலோ சார் நான் தான் சாருமதி"என்றாள் அவள்
"ஒ நீங்களா உட்காருங்கள்" என்றான் அவன்
"சொல்லுங்கள், என்ன பேச வேண்டும் உங்களுக்கு?" என்றான் அவன் .
அவள் தனது எண்ணத்தை மிகுந்த தயக்கத்துடன் வெளிபடுத்தினாள்.

மிகவும் பொறுமையாக கேட்ட அவன் "சாரு எதை வைத்து நீங்கள் என்னை விரும்புகின்றீர்கள்? " என்றான் அவன்.
"இல்லை சார் உங்கள் எழுத்து மிகவும் பிடிச்சு இருக்கு, அதில் நீங்கள் எழுதும் ஒவ்வொரு கருத்தும் மிகவும் நன்றாக இருக்கின்றது"அத்துடன் " இவ்வளவு நல்ல ஒரு கருத்தும், உயர்ந்த நோக்கமும், ரசனையும் உள்ள உங்களை மாதிரி ஒரு கவிஞனை தான், நான் என் கணவராக அடைய வேண்டும் என்று நினைத்து இருந்தேன்" என்றாள் அவள்.

"சாரு நீங்கள் இப்படி பேசுவதால், உங்களுக்கு ஒரு உண்மை சொல்ல போகின்றேன். என்ற சொன்ன அவன் ,
"நீங்கள் நினைப்பது போல நான் திருமணம் ஆகாதவன் இல்லை.
நான் இந்த கவிஞனாக அறியபடுவதற்கு முன்னரே திருமணமாகி இருந்தேன். எனக்கு மனைவியும் ஒரு மகளும் இருந்தார்கள். எனது கெட்ட குடிபழக்கத்தின் விளைவால், ஒரு கார் விபத்தில் என் மனைவியை பறிகொடுத்து விட்டு எனது ஒரு காலையும் இழந்து விட்டேன். இப்போது நான் செயற்கை காலில் தான் நடக்கின்றேன்.

நீங்கள் மிகவும் அழகாகவும் சின்ன வயதாகவும் இருக்கின்றீர்கள். என் மேல் வந்தது ஒரு உண்மையான காதல் இல்லை . ஒரு மயக்கம் அவ்வளவு தான் . எனக்கு இப்போது உறவு என்று சொல்லி கொள்ள ஒரு மகள் இருக்கின்றாள் . அவள் தான் என் உயிர் எப்போதும்
.நான் இந்த ஜென்மத்தில் சந்தோசமாக வாழ அவள் மட்டும் போதும் என்றான் அவன் .

சாரு உங்களுக்கு ஒரு அண்ணா என்ற இடத்தில் இருந்து ஒன்று சொல்கின்றேன் கேளுங்கள் ஒரு எழுத்தை மட்டும் வைத்து அவர்கள் நல்லவராக இருப்பார்கள் என்று நினைத்து விடாதீர்கள். எழுதுவது ,கவிதை புனைவது என்பது ஒரு கலை.அந்த கலையையும் அவர்களது தனிப்பட்ட வாழ்கையும் இணைத்து ஜோசித்து விடாதீர்கள். ஒரு எழுத்தாளனின் எழுத்துக்கும், அவனது தனிப்பட்ட வாழ்வுக்கும் நிறைய வித்தியாசம் உண்டு . அதை புரிந்து நீங்கள் நன்றாக வாழ் வாழ்த்துகின்றேன் "என்று சொன்ன அவன் அருகில் இருந்த முச்சக்கர நாற்காலியில் அமர்ந்து கொண்டு அறையை விட்டு வெளியேறினான்.அவன் சென்ற திசையை பார்த்தபடி நின்றாள் சாருமதி

எழுதியவர் : nilakavi (1-Oct-12, 4:36 pm)
பார்வை : 480

மேலே