தாத்தா பாட்டி சொன்ன கதை

"ஹாய் " என்று கை காட்டி
"பாய் " என்று பல்லிளித்து
போய் வரேன் என்று சொல்லி
பேய் போல் மறைவதைப் பார்க்கையில்
அன்புடன் கைகூப்பி
அழகாய் வணக்கம் சொல்லி
பாசமாய் குசலம் குலாவிய பின்
விடை பெற்று செல்வார்களாம்....
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
வீடு வரும் விருந்தாளியை
வீதி சென்று மடக்கி
உணவகத்து விருந்தோம்பலிலே
விரட்டி வரும் விருந்தைப் பார்க்கையில்
வீடு வரும் விருந்தாளியை
வீதி சென்று வரவேற்று
விடக்கோழி விரட்டிப் பிடித்து
வீதி மணக்க சமைத்து
அருகிருந்து பரிமாறி
விருந்தோம்பல் செய்வார்களாம்...
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
கோட்டு சூட்டும் போட்டுக்கிட்டு
டஸ்ஸு புஸ்ஸு னு பேசிக்கிட்டு
லண்டனிலே பிறந்தவனாட்டம்
மண்டையிலே கர்வம் கொண்டு
மமதையில் போறதைப் பார்க்கையில்
எட்டு முழ வேட்டி கட்டி
முட்டி மேலே ஏத்திக் கட்டி
வயலிறங்கி பாத்தி கட்டி
வாஞ்சை தமிழ் பேசிக்கிட்டு
வஞ்சனையில்லாம வாழ்ந்தாங்களாம்
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
கிராப் கட்டிங் வெட்டிக்கிட்டு
டைட் டாப்ஸ் போட்டுக்கிட்டு
ஜீன்ஸ் பேன்ட் மாட்டிக்கிட்டு
ஆணா? பெண்ணா? என்ற
அடையாளம் தெரியாம போகும்
இளசுகள் பார்க்கையில்..
கண்டாங்கி சேலை கட்டி
கை நிறைய கொசுவம் மடிச்சு
தலை நிறைய மல்லி வெச்சு
தலை குணிஞ்சு நடப்பாங்களாம்
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
காலைக் கதிரவனை பார்க்காம
விடிஞ்ச பின்னும் தூங்குறதும்
பல் கூட துலக்காம படுக்கையிலே
காப்பித் தண்ணி குடிக்கிறத பார்க்கையில்
கோழி கூப்பிட எழுந்திருச்சு
வேம்பு குச்சியில் பல் துலக்கி
கஞ்சித் தண்ணி குடிச்சுப் புட்டு
காலை வேலைக்கு போவாங்காளாம்...
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
பிட்ஸா பர்க்கர் சாண்ட்விச்
துரித உணவு மோகம் கொண்டு
துரித நோயும் பல கண்டு
துன்பப் படுறத பார்க்கையில்
உப்புக் கஞ்சி வெங்காயம்
கம்மங்கூழ் கருவாடு
நெல்லுச் சோறு கீரைக் குழம்பு
இயற்கை உணவே உட்கொண்டு
நோயின்றி வாழ்ந்தார்களாம்
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
தொலைக்கட்சியில் மூழ்கிய மக்கள்
கணினிக்கு அடிமையான கூட்டம்
தேகப் பயிற்சி மறந்து நாளும்
சோம்பித் திரியும் கூட்டம் பார்க்கையில்..
கத்திச் சண்டை கம்புச் சண்டை
களிகம்பு கபடியாட்டம்
குஸ்தியென்று குதுகலமாய்
உடற்பயிற்சி செய்வார்களாம்..
தாத்தா பாட்டி சொன்ன கதை.!
அப்பனுக்கு கிழக்கே வேலை
ஆத்தாளுக்கு மேற்கே வேலை
பிள்ளைங்க நிப்பாங்க தெருவோட
அலுவலக எந்திரமாய் போன
தனிக் குடித்தனம் வாழ்க்கை பார்க்கையில்..
நாலு குடும்பம் நலமாய் வீட்டினிலே
நாற்பது உறவினர்கள் ஒரே கூட்டினிலே
வீட்டை அலங்கரிக்க அனுபவ பெருசுகள்
அகமகிழ நிறைய சின்னஞ் சிறுசுகள்
கூட்டா இருந்து குடும்பம் நடக்குமாம்
தாத்தா பாட்டி சொன்ன கதை.!