தாய்மையின் தவிப்பு

தாய்மையின் தவிப்பு
(கவிதை)

விநாடி முள்
வெட்கித் தலைகுனியும்
அவளின் காலை நேரக்
களப் பணியாற்றலில்!

சமையல் பந்தயத்தில்
ஓடிக் கொண்டே
ஸ்நான வேள்விக்கும்
நெய் வார்ப்பாள்!

பிள்ளைப் பூச்சிகளின்
பள்ளிப் பயணத்திற்கு
பரபரப்பு நதியில்
பரிசலோட்டுவாள்!

அலுவலகக் கணவனின்
அவசரப் புறப்பாட்டிற்கு
அருவித் தாவலாய்
ஆடை தேடுவாள்!

செய்தித் தாள் மேயும்
மாமனார் ஆட்டுக்கு
காப்பிப் புல்லைக்
கச்சிதமாய்க் கொடுப்பாள்!

எட்டு மணியின்
இறுதித் துhறலில்
எல்லாக் களேபரமும்
தொலைந்து போன பின்

மதிய உணவு ரசத்தில்
மறந்து போன உப்புக்காய்
தவித்துத் தவித்து
தண்ணீர் குடிப்பாள்!
-------------------------------


முகில் தினகரன்
கோவை.6.

எழுதியவர் : முகில் தினகரன் (11-Dec-12, 4:46 pm)
பார்வை : 144

மேலே