எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

“தமிழன்” என்று சொல்லும் போது நமக்குள் ஒரு திமிர்த்தனம்...

“தமிழன்” என்று சொல்லும் போது நமக்குள் ஒரு திமிர்த்தனம் கிளர்ந்தெழுவதை பெருமையாக நினைக்கின்றோம் ! அந்த திமிர்தனதிற்கு இன்றைய சூழலில் எந்தளவு கிராக்கி இருக்கிறது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டிய காலகட்டம் இது.

தமிழன் என்று சொல்லி பெருமையாய் திரியும் எங்களுக்கு அந்த பெருமை இனியும் தொடருமா, இல்லையேல் தமிழன் என்றால் “அவமானம்” என்ற நிலை நீளுமா என்ற கேள்விக்கான பதில் காலப்போக்கில் கசப்பானதாக இருக்கவும் சாத்தியமுண்டு !

கலை என்பது ஒரு மொழியின் மிகப்பெரிய அடையாளம். தமக்கேயுரிய கலை இலக்கிய விழுமியங்களைச் சேதப்படுத்தாமல் இருப்பது, “கலைஞன்” என்ற சொல்லுக்குப் பொருளாய் இருப்பவர்களின் கடமையாக இருக்க வேண்டும் !

எந்த மொழி மக்களுக்கும் மிகவும் நெருக்கமாகவும் விருப்பமாகவும் இருக்கும் கலை என்று பார்க்குமிடத்து “இசை” முதலிடம் பிடித்துக் கொள்கிறது !

இயல், இசை, நாடகம் என்ற மூன்று பிரிவுகளையுடைய தமிழ், இந்த இசை என்ற உன்னத கலையை எந்த நிலையில் இன்று பேணுகிறது என்பதை நோக்குமிடத்தில், கசக்கும் பல உண்மைகளை முன்வைக்க வேண்டிய நிர்பந்தம் உருவாகின்றது.

இசை என்ற தமிழின் முக்கிய பிரிவானது, இயல் மற்றும் நாடகம் என்ற மற்ற இரு பிரிவுகளையும் சார்ந்து வரும் சந்தர்ப்பங்கள் அதிகம். அப்படி இருக்கும் இசை கோரப்படுத்தப் படுவது என்பது, மற்ற இரு பிரிவுகளையும் சேர்த்தே சேதப்படுத்தும் என்பதை பலரும் அறிந்துக் கொள்ள வேண்டும்.

கலைத்துறையின் ஆட்சிப்பீடம் என்றால் அது திரைத்துறை என்பது தான் இன்றைய நிலை. இந்த திரை துறை தான் தமிழின் அடையாளங்களை கொஞ்சம் கொஞ்சமாய் அழித்து சின்னாப்பின்னப் படுத்திக் கொண்டிருக்கிறது என்றால் அது மிகை இல்லை என்பதும், அதே திரை துறை தான் ஒரு காலகட்டத்தில் மாபெரும் புரட்சிகளைச் செய்தது என்பது தவறில்லை என்பதும் வெளிச்சமாகிறது !

மூத்த மொழி, கலைமகளின் முழுவுருவம் என்ற போற்றப்படும் தமிழ்கலைகள் பல மோகங்களுக்கு போதையாகி, அடிமையாகி அறியாமலேயே சுயகொலைச் செய்துக் கொண்டிருக்கின்றன !

இன்றைய தமிழ் பாடல்களில் ஒரே ஒரு தமிழ் வார்த்தை அடையாளம் காணப்பட்டாலும், அது பெரும் சாதனை என்று சொல்லும் அளவில் கவலைக்கிடமாகிக் கொண்டிருக்கிறது !

தமிழை நேசிக்கும், தமிழ் கலைகளை நேசிக்கும், தமிழின் எதிர்காலத்தை நேசிக்கும் கலைஞர்கள் ஓரங்கட்டப் படுகிறார்கள் அல்லது நிராகரிக்கப் படுகிறார்கள்.

அந்திய மோகம், ஆங்கிலப் போதை, பணத்தாசை, பிற நாகரிகத் தழுவல், அக்கறையின்மை போன்ற எல்லா காரணிகளினதும் கூட்டுச் சதியில் கற்பழிக்கப் பட்டுக் கிடக்கிறது தமிழிசை!

தமிழ் என்ற கடலைத் தாண்டி ஓடி ஆங்கிலம் என்ற ஓடையில் மீன்பிடிக்கும் தமிழ் கலைஞர்கள் தண்டிக்கப் பட வேண்டியவர்கள். மக்களை தவறான போதைகளுக்கு அடிமையாக்கி, தமிழின் பெருமைகளை கேள்விக்குறியாக்கும் இந்த “கொலைஞர்கள்” திருந்துவார்கள் என்பதற்கான எந்த சாத்தியங்களுக்கும் இல்லை!

மெல்லிசையாக இருந்தாலும் வன்னிசையாக இருந்தாலும் அது நமது அடையாளமாக இருக்க வேண்டும். இன்னொருவனின் உழைப்பையோ படைப்பையோ திருடி, கொள்ளையடித்து கலைத் தொழில் செய்வதென்பது அநாகரிகமான செயல்.

இன்றைய தமிழ் திரையுலகத்தின் நாகரிக மாற்றம் கொண்டுவந்து சேர்த்த அரைவேக்காட்டு இசையமைப்பாளர்கள், பாடகர்கள், கவிஞர்கள் எந்தவொரு மொழியையும் கௌரவப் படுத்த முடியாத அல்லது தெரியாத; அசிங்கங்களை மக்களிடையே திணித்து, தாம் பெரிய ஜாம்பவான்கள் என்று தம்மட்டம் அடித்து திரிகிறார்கள் !

நாள் : 18-Oct-14, 7:11 am

மேலே