எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

உலக மகளிர் தின வரலாறு 1908இல் நியூயார்க்கில் 15000...

உலக மகளிர் தின வரலாறு


1908இல் நியூயார்க்கில் 15000 பெண்கள் ,சரியான சம்பளம், குறைந்த வேலை நேரம் மற்றும் வாக்குரிமை கேட்டு ஊர்வலம் நடத்தினர். பின்னர் சோசியலிஸ்ட் பார்ட்டி ஆப் அமெரிக்கா 1909இல் நேஷனல் வுமன்ஸ் டேயாக (National women's day)பெப்ரவரி 28ஆம் நாளை அறிவித்தனர். 1913 வரை பெப்ரவரி கடைசி ஞாயிறு நேஷனல் வுமன்ஸ் டேயாகக் கொண்டாடப்பட்டது. இதற்கிடையே 1910இல் வேலைபார்க்கும் பெண்களின் இரண்டாவது உலக மாநாடு கோப்பென்ஹேகனில் (Copenhagen) நடைபெற்றது. அதில் கிளாரா ஜெட்கின் என்பவர், சோசியலிஸ்ட் டெமோக்ரடிக் பார்ட்டியின் மகளிர் தலைவியாக இருந்தவர், உலக பெண்கள் தினம் கொண்டாட வேண்டும் என்று முன்வைத்தார். தங்கள் உரிமைகளுக்காக உலகம் முழுவதிலும் உள்ள பெண்கள் ஒரே நாளில் இதைக் கொண்டாட வேண்டும் எனபதே அவர் நோக்கம். பதினேழு நாடுகளில் இருந்து வந்திருந்த சுமார் நூறு பெண்கள் கிளாராவின் கருத்தை ஆதரித்து ஒருமனதாக 'உலக மகளிர் தினம்' கொண்டாட வேண்டும் என்று முடிவு செய்தனர். இவர்களில், பின்லாந்து பார்லிமெண்டிற்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்த முதல் மூன்று பெண்களும் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தீர்மானத்தைத் தொடர்ந்து 1911 மார்ச் 19ஆம் தேதியன்று 'உலக மகளிர் தினம்' முதன்முதலாக ஆஸ்ட்ரியா, டென்மார்க், ஜெர்மனி மற்றும் ஸ்விட்சர்லாந்தில் கொண்டாடப்பட்டது. வாக்குரிமை, பணியுரிமை, பொதுப்பணித் துறைகளில் இடம், பாலியல் பாரபட்சத்தை நிறுத்த என்று பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஒரு வாரம் கழிந்து மார்ச் 25ஆம் தேதி நியூயார்க்கில் 'ட்ரைஆங்கிள்' தீ விபத்து என்று அறியப்படும் ட்ரைஆங்கிள் ஷர்ட்வைஸ்ட் தொழிற்சாலை யில் ஏற்பட்ட தீவிபத்து (Triangle Shirtwaist Factory fire) 140 பெண்களைப் பலிகொண்டது. இதன் பின்னர், வேலையிடப் பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் நலன் சட்டம் இயற்றுதல் என்று அடுத்த வருடங்களில் தீர்மானங்கள் முன்வைக்கப் பட்டன.



முதல் உலகப்போர் துவங்கும் முன்னர் அமைதியை வலியுறுத்தி,ரஷ்ய மகளிர் பெப்ரவரி 1913, கடைசி ஞாயிற்றுக் கிழமையன்று அவர்களின் முதல் உலக பெண்கள் தினத்தைக் கொண்டாடினர். அதன் பின்னர் ஏற்பட்ட கலந்துரையாடல்களுக்குப் பின் உலக மகளிர் தினம் மார்ச் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டது. அப்பொழுதிலிருந்து அதுவே கடைபிடிக்கப் படுகிறது. 1914இல் ஐரோப்பாவின் பல இடங்களிலும் போருக்கு எதிராகப் பெண்கள் ஊர்வலம் நடத்தி, பெண்கள் ஒற்றுமையைக் காட்டினர்.
1917இல் இரண்டு மில்லியனிற்கும் அதிகமான ரஷ்ய வீரர்கள் போரில் உயிர் துறந்திருந்தனர். அந்த ஆண்டு பெப்ரவரித் திங்கள் கடைசி ஞாயிறன்று பெண்கள் 'பிரட் and பீஸ்' (bread and peace) என்ற போராட்டத்தைத் துவக்கினர். நான்கு நாட்கள் தொடர்ந்த போராட்டத்தின் முடிவில் ஜார் அரசு நீக்கப்பட்டு, பதவிக்கு வந்த தற்காலிக அரசு பெண்களுக்கு வாக்குரிமை அளித்தது. பெண்களின் மன உறுதிக்கும் ஒற்றுமைக்கும் கிடைத்த பரிசு! பெண்கள் இணைந்து போராடினால் எந்த அரசையும் நிலை குலையச் செய்ய முடியும். பெண்களின் போராட்டம் துவங்கியது அப்பொழுது ரஷ்யாவில் பின்பற்றப்பட்ட ஜூலியன் காலெண்டரில் பெப்ரவரி 23ஆம் நாள், அது தற்போதைய கிரகோரியன் காலெண்டரில் மார்ச் 8.
சோசியலிஸ்ட் இயக்கத்தால் துவங்கப்பட்ட உலக மகளிர் தினம் பின்னர் உலகளாவிய கவனம் பெற்று வளர்ந்த மற்றும் வளரும் நாடுகள் அனைத்திலும் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபையும் வருடாந்திர மாநாடுகள் நடத்தி உலக மகளிரின் உரிமைகளையும் சமூக, அரசியல் பொருளாதாரப் பங்கேற்பையும் வலியுறுத்தி வருகிறது. ஐக்கிய நாட்டுச் சபை 1975 ஆம் ஆண்டை உலக மகளிர் ஆண்டாக அறிவித்தது. மகளிர் இயக்கங்களும் அரசுகளும் மகளிர் தினத்தன்று பல நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து பெண்கள் முன்னேற்றத்தைக் கொண்டாடியும் வாழ்வின் அனைத்துத் தரப்பிலும் கிடைக்கவேண்டிய சமஉரிமைகள் கிடைப்பதற்கான விழிப்புணர்வை நினைவுபடுத்தியும் வருகின்றன.
இந்த நூற்றாண்டில் ஆப்கானிஸ்தான், அர்மேனியா, பெலாரஸ், கம்போடியா, கியூபா, கசகிஸ்தான், ஜியார்ஜியா, லாவ்ஸ், மங்கோலியா, எரித்ரியா, ரஷ்யா, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான், உகாண்டா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், வியெட்னாம், சாம்பியா போன்ற நாடுகளில் மகளிர் தினம் அரசு விடுமுறையாகவும், நேபால், சீனா, மடகாஸ்கர் போன்ற நாடுகளில் பெண்களுக்கான அரசு விடுமுறையாகவும் அனுசரிக்கப்படுகிறது. ஆண்கள் தங்கள் வீட்டுப் பெண்களை மரியாதை செய்யும் விதமாகப் பரிசுகள் கொடுத்தும் கொண்டாடுகின்றனர்.
உலக மகளிர் தினத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் சமூக வலைத்தளங்களில் சில hashtags பயன்படுத்த இன்டர்நேஷனல் வுமன்ஸ் டே அமைப்புக் கேட்டுக்கொண்டுள்ளது.

நாள் : 8-Mar-15, 1:06 pm

மேலே