அனுபவத்தின் குரல் - 69 ---------------------------------- நாம் வாழும்...
அனுபவத்தின் குரல் - 69
----------------------------------
நாம் வாழும் காலத்தில் சந்திக்கும் பலரைப்போல , உள்ளத்தில் உற்சாகமூட்டும் பல நிகழ்வுகளை கடப்பது போலவே சில நேரங்களில் மிகவும் வேண்டியவர்களை , மனதுக்குப் பிடித்தவர்களை , உள்ளத்தைத் தொட்டவர்களை , மதிப்புமிக்க நெஞ்சங்களை இழக்கவும் நேரிடுகிறது . அது இயற்கையின் கூற்று என்றாலும் , மரணத்தை தடுக்க முடியாது என்றாலும் , இதயத்தை பெரிதும் பாதிக்கும் அளவிற்கு இருந்திடும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்காது என்று நம்புகிறேன் . அவர் கலை , இலக்கிய , அரசியல் பல்வேறு துறையை சார்ந்தவர்களானாலும் சரி , உழைப்பால் உயர்ந்தவர்கள் ஆனாலும் சரி , கொள்கை வீரர்கள் ஆனாலும் சரி , பன்முக படைப்பாளிகள் ஆனாலும் சரி அது அனைவருக்கும் பொருந்தும் . அந்த நேரத்தில் நாம் மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டு , வருத்ததில் மூழ்கி , சோகத்தின் விளிம்பில் நின்றிடும் நிலைக்குத் தள்ளப்படுகிறோம் . இது மனித இனத்தின் இயல்புதான் , மறுக்கவில்லை .
சில நேரங்களில் , நான் சிந்திப்பதுண்டு . அதுபோன்ற பிரபலங்கள் , தலைவர்கள் , கலைஞர்கள் , எழுத்தாளர்கள் , கவிஞர்கள் நம்மை விட்டுப் பிரிந்தாலும் , அவர்கள் வாழ்ந்த காலத்தில் நாம் வாழ்ந்தோமே என்று நினைத்து நமக்குள் சிலிர்த்துக் கொள்வதும் உண்டு . புகழின் உச்சத்தை அடைந்தவர்கள் பலரையும் நாம் கண்டதும் , சந்தித்ததும் நமக்கு பெருமை என்றாலும் ஆழ்மனதில் ஒரு சோகம் பரவி இருக்கும் என்பதை அனைவரும் ஒப்புக்கொள்வர் . அவர்களை பற்றி நினைக்காமல் இருக்க முடியாது . அது நம்மை பலவழிகளில் ஈர்த்தவர்கள் என்பதால் அந்த நிலை நமக்கு ஏற்படுகிறது .
சிலகாலம் கழித்து தான் நாம் அதிலிருந்து விடுபடுவோம் . உள்ளத்தின் காயத்தை ஆற்றிடும் ஒரே மருந்து காலம்தான் . எப்படி நமது நெருங்கிய உறவுகளை அல்லது நட்புகளை இழந்த பின்பு மறப்பதற்கு சில காலம் பிடிக்கிறதோ அது போலத்தான் . அனைத்துக்கும் நம் மன நிலை மாற்றம்தான் காரணமாகிறது. இதயத்தில் ஏற்படும் இரணங்களை ஆற்றிட , நம் மனதை வேறு வழியில் திசை திருப்பியும் , செயல்களில் அதிக கவனம் செலுத்தி அதனை வேகப்படுத்தினால் நிச்சயம் அதுவே மருந்தாக அமையும் . நம்மை ஊக்கப்படுத்தும் , மனதை உறுதிப்படுத்தும் என்பதில் ஐயமில்லை .
பழனி குமார்