என்ன நினைத்து மனிதரென பிறந்தோம்..!!

என்ன நினைத்து
மனிதரென பிறந்தோம்,
முன்ஜென்ம எச்சங்களின் மீதியை தேடவா...??
அல்லது மிச்ச வாழ்வின் அடிமுடி நாடவா..??

எவன் எப்படி போனால் என்ன,
நான் நானாக இருக்கிறேன் என
சுயநல கிருமியாக மனிதன் மாற
மரபணு மாற்றம் காரணமல்ல..!!
மனிதரின் கொடிய மனநிலை
மாற்றமெனும் ரணமே காரணம்..!!

எச்சில் உமிழ நேரமின்றி
இத்துப்போன காரியத்தில்,
எட்டா கனியை எட்டிப்பறிக்க
கடிகார நிமிடம் தொலைக்கின்றான்..!!

உதவியென்று எவனொருவன் வந்தால்
திறந்த கதவை மூடிவிட்டு
உழைத்து பிழை என்று,
உள்ளிருந்து யோசனை சொல்கின்றான்..!!

மனிதமொன்று உயிருக்கு ஊசலாடினாலும்
எட்டி நின்று கைகட்டி வேடிக்கை பார்த்து,
அட பாவமே என மட்டும் சொல்லி
மனிதரில் மனிதராய் கலந்து விடுகிறான்..!!

ஆடம்பர ஆட்டம் போட்டு,
அவன் சிதறிய பருக்கை சோற்றை,
இல்லை என்பவன் வந்தால் மட்டும்
இல்லை என்று சொல்லி விடுகிறான்..!!

இத்தனை பாவம் செய்து
காலம் போன பின்னே,
நான் பாவியாகி விட்டேன் என
புலம்பி தவித்து யாருக்கென்ன லாபம்..??

படைத்தவன்,படைக்கும் தொழிலை
பார்க்க போய்விட்டான்..!!
படைக்கப்பட்ட மனிதர் மட்டும் ஏன்
படைத்தவனை பலிக்கின்றோம்..!!

எழுதியவர் : மனோ ரெட் (25-Apr-13, 1:33 pm)
பார்வை : 124

மேலே