வாழ்க்கை
ஒவ்வொரு நாளாய்
விலகிச் செல்கிறது
வாழ்க்கை...
இரவில் உறைந்து
பகலில் விலகும்
என் கவிதையைப் போல.
*******************************************************************
தினமும்
மிதந்து வருகிறது
பகலும் இரவும்....
ஒளியின் உடலைச் சுற்றியபடி
என் வாழ்வின் வீதியெங்கும்.
நழுவும் கனவுகள்...
கவிதையின் வரிகளில் தவிக்க...
காலடித் தடமற்ற நடையோடு
நழுவும் வாழ்வு...
தேர்ந்த மீன் என..
என்னைக் கடக்கும்
என் காலத்தின்
வலைகளில் அகப்படாமல்.
************************************************************************
மழையின்....
ஈரத்தோடு இருக்கிறது
வாழ்க்கை
கவிதை எழுதிய காலங்களில்....
ஊடலால் வெயிலாகும் பருவம்
இரசித்தபடி.
*****************************************************************
மயில் தோகையைப் போல்
பிடித்து வைத்திருந்த வெயில்...
புத்தகத்திலிருந்து காணாமல் போனதில்..
கசந்து அழுகிறது குழந்தை...
உலகம் வெறுத்தபடி.
********************************************************************
வாழ்க்கை
என் முதுகின் மேல்
இறக்கப்படாத பாரமாய் ...
பயணிக்கிறது.
நிறுத்தம் தெரியாத பயணியென
நகர்ந்து கொண்டிருக்கிறேன்...
கானல் சாலைகளில்.
*******************************************************************
வாழ்க்கை
மரணத்தினாலானது.
மரணம்...
வாழ்க்கையினாலானது.
இரண்டும்
ஒருபோதும் சந்திப்பதில்லை...
என்பதில்தான்...
காலம் படைத்திருக்கும்
கடவுளின் வாழ்க்கை
வாழ்ந்து கொண்டிருக்கிறது.
**********************************************************************