ஆய்வகத்தில் கண்ணீர்துளி
அதிகாலை
நான்கு முப்பது மணி
மனதினுள் எழுந்த பயம்
தூங்கவிடாமல்
உறக்க கதவை
தட்டிக்கொண்டே இருந்தது
போருக்கு தயாராகும்
வேந்தனை போல்
தேர்வுக்கு தயாரானேன்
ஈரப்பதம் உலர்ந்து
தீ பற்றிக் கொள்ளும்
பக்குவம் என்னுள் வந்தது
தேர்வை சந்திக்க
ஆயுத்தமாயிட்டேன்
காலை
ஒன்பது இருபது மணி
இதய அறைக்குள்
இதமில்லாமல்
தேர்வு அறைக்குள்
நுழைந்தேன்
அறை கண்கானிப்பாளரின் வருகை
நெஞ்சில் ஈட்டியை
பாய்த்தது
கனல் தெறிக்கும் பார்வை
மின்னல் வேக நடை
பயத்தை தூண்டும் முகம்
புயலில் சிக்கும்
புறாவாக போகிறேன் யென
என் சிந்தையில்
சப்தம் ஒலித்தது
நரகத் தோட்டத்தில் நின்று
சொர்க்க வாசம் தேடும்
வேடிக்கை அது
வினாத்தாளும் விடைத்தாளும்
பிரசுரிக்கப்பட்டன
வினாத்தாளை கண்டவுடன்
என் அடி நெஞ்சை
அனல் அலைகள்
வந்து அடித்தன
இரண்டு காரத்தையும்
இரண்டு அமிலத்தையும்
கண்டுபிடிக்கவே
இரண்டு மணிநேரம்
இன்னும் இருப்பதோ
ஒரு மணி நேரம்
என் எழுதுகோலின் முள்
அதிவேக தொடர்வண்டியை போல்
பயணித்தது
முடிவுக்கு முன்புவரை
மெளனம் காத்த
தேர்வுக் கண்கானிப்பாளர்
முடிவு எழுதும் முன்பே
என் முடிவை
எழுதிவிட்டார்
அது ஒரு
விஷ வினாடி
மூன்று நிமிடம் போதும்
முடிவை எழுத
ஒரு வினாடி வழங்கக்கூட
அவர் தயாராய் இல்லை
கண்ணுக்குள் ஒரு
கண்ணீர்த் தேக்கம்
இறுதியில்
முடிவே இல்லாமல்
முடிந்துவிட்டது
என் ஆய்வகத்தேர்வு