அப்பாவின் நினைவுகள்

வருடப்பிறப்பு,பொங்கல்
தீபாவளியென
வந்து போகும்
பண்டிகைக்காலங்களில்
எங்கிருந்தாலும்
ஓடிவந்துவிடுகிறது
அப்பாவின் நினைவு
வெளியூர் கிளம்பும் தருணங்களில்
மேற்சட்டைப்பை
காலியாக இருக்கும் வேளைகளில்
மனம் அழுது மன்றாடும்
அப்பாவை நினைத்து
வெறும் காலுடனோ
வெற்றிலை வாயுடனோ
எவரையாவது காணும் போது
எந்தையின் நினைவு
வந்து வருத்துகிறது
தெருக்களில்
நடந்து போகையில்
அப்பாவின் முகச்சாயலுடையோரை
கண்டதும்
எளிதில்
ஏமாந்து விடுகிறேன்
நான் கொள்ளியிட்டதையும்
மறந்து !
பதினாறு வயதில்
வேலைக்கு போகும்
சிறுவர்களை பார்க்கையில்
இருபத்தியாறு வருடங்களாக
இருத்திவைத்து சோறுபோட்ட
அப்பாவின் முகம்
கண்ணெதிரே வந்து நிற்கும்
பள்ளிக்கு செலவிட்ட
பணத்தில்
சிறு பங்கையேனும்
அவருக்கு
கொள்ளியிடும்போதும் கூட
என்னால்
கொடுத்து விட முடியவில்லை !
பெற்றகடன் தீர்க்க
என்னால் முடிவதென்னவோ
இதுதான்
மார்கழி மாத
வானத்தோடு சேர்ந்து
நானும் அழுகிறேன்
அப்பாவை நினைத்து