இலக்கணமும் நீயே! இலக்கியமும் நீயே!
மழலை அரும்பே,
நீ என் கருவில் உருவான 'உயிரெழுத்து'
என் மெய் தொட்டு விளையாடும் 'மெய்யெழுத்து'
என்னை அம்மா என்றழைப்பது தமிழின் 'முதலெழுத்து'
நீ எங்களைச் சார்ந்து வளர்கின்ற 'சார்பெழுத்து'
நீ குரலெடுத்து அழும்போது 'அளபெடை'
நான் ஆறுதல் கூறும்போது 'ஆற்றுப்படை'
நான் தாலாட்டு பாடும்போது 'பிள்ளைத்தமிழ்'
என் முந்தானை பிடித்துத் தொடரும்போது 'அந்தாதி'
நீ தேம்பி அழும்போது 'அகவல்'
உனது விளையாட்டுகள் 'திருவிளையாடற் புராணம்'
நீ செய்யும் குறும்புகள் 'பெரிய புராணம்'
நீ பேசும் மழலை 'திருவாசகம்'
உன் இதழ் சிந்தும் புன்னகை 'தேவாரம்'
நீ ஈரடி நடந்தால் 'திருக்குறள்'
நீ நாலடி நடந்தால் 'நாலடியார்'
நீ எட்டடி நடந்தால் 'எட்டுத்தொகை'
நீ பத்தடி நடந்தால் 'பத்துப்பாட்டு'
எங்கள் இனிய இல்லறத்தின் இலக்கணமும் நீயே!
நாங்கள் நித்தம் படிக்கின்ற இலக்கியமும் நீயே!
(படித்ததில் பிடித்தது)